காபா: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றிபெற்ற நிலையில், அந்த அணியின் ஷமார் ஜோசப்பிற்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்திருந்த போது, திடீரென டிக்ளேர் செய்தது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸை வெஸ்ட் இண்டீஸ் அணி 22 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது.

பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற 216 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 4வது நாளில் 113 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வந்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரர் ஒரே ஸ்பெல்லில் 10 ஓவர்களை வீச, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியாக ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷமார் ஜோசப் ஹேசல்வுட்டை வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 207 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதேபோல் 27 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியா மண்ணில் வைத்து ஆஸ்திரேலிய அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது. இதனால் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஷமார் ஜோசப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், காயமடைந்த ஷமார் ஜோசப் மீண்டெழுந்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவாரஸ்யம் என்ன என்பதையும், அதில் இருந்து டிராமாவையும் ரசிகர்களுக்கு காட்டியுள்ளது. ஒவ்வொரு வீரரின் மன உறுதியையும் சோதிக்கும் வகையில் டெஸ்ட் கிரிக்கெட் சவால் அளிக்கும். அப்படி மனதளவில் உறுதியான ஒருவர் தான் 27 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வீழ்த்த காரணமாக அமைந்துள்ளதாக பாராட்டியுள்ளார்.