சிட்னி: ஆஸ்திரேலியா அணியின் உஸ்மான் கவாஜா மற்றும் சாம் கான்ஸ்டஸ் இருவரும் நேரத்தை கடத்த நினைத்து பும்ராவிடம் சண்டைக்கு சென்றதாக இந்திய அணியின் ரிஷப் பண்ட் குற்றம்சாட்டியுள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையில் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை என்றாலும், கான்ஸ்டஸின் நோக்கம் அதுவாக மட்டுமே இருந்ததாக கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், ஆஸ்திரேலியா அணி 9 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து களத்தில் இருக்கிறது. கடைசி நேரத்தில் இந்திய அணியின் கேப்டன் பும்ராவுடன் ஆஸ்திரேலியா இளம் வீரர் கான்ஸ்டஸ் மோதலில் ஈடுபட்டார்.

இதனால் டென்ஷனான பும்ரா அடுத்த பந்திலேயே அவருக்கு கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தி பதிலடி கொடுத்தார். இந்திய அணியிடம் விக்கெட்டை கொடுக்க கூடாது என்பதற்காக நேரத்தை கடத்த கவாஜா - கான்ஸ்டஸ் கூட்டணி முழு மூச்சாக செயல்பட்டனர். ஆனால் பும்ரா அசால்ட்டாக கவாஜாவை வீழ்த்தி முதல் நாள் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து ரிஷப் பண்ட் பேசுகையில், ரோஹித் சர்மா நீக்கப்பட்டது எமோஷனலான முடிவு. ஏனென்றால் அவரை எப்போதும் ஒரு கேப்டனாகவே பார்த்திருக்கிறோம். ஆனால் சில முடிவுகளில் என்னை போன்றோரால் தலையிட முடியாது. இதற்கு மேல் என்னால் எதுவும் இந்த விவகாரத்தில் பேச முடியாது. எனது பேட்டிங்கை பொறுத்தவரை அதிகளவிலான பந்துகள் உடலில் தாக்கியது.
சில நேரங்களில் இந்திய அணிக்காக கூடுதலாக பணியாற்ற வேண்டும். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படி உடலில் பந்துகளை அடியாக வாங்கியது முதல்முறை. இதனை பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. முதல் இன்னிங்ஸில் 220 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால் நல்ல ஸ்கோராக இருந்திருக்கும். அதேபோல் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியா அணியின் இரு வீரர்களும் நேரத்தை கடத்த நினைத்தனர்.
இந்திய அணிக்கு கூடுதல் ஓவர்கள் கிடைக்க கூடாது என்று நேரத்தை வீணாக்கினார்கள். அதற்காக தான் கான்ஸ்டஸ் கேப்டன் பும்ராவுடன் மோதினார் என்று கருதுகிறேன். அவர் என்ன சொன்னார் என்பது என் காதில் விழவில்லை. ஆனால் மோதலில் ஈடுபட்டது நேரத்தை வீணாக்குவதற்கு என்பதை மட்டும் உணர்ந்தேன். இந்த பிட்ச் 2வது செஷனுக்கு பின் பேட்டிங் செய்வதற்காக கடினமாக மாறியது.
இதேபோல் 2வது நாள் ஆட்டத்திலும் இப்படியே செயல்படும் என்று நினைக்கிறேன். கொஞ்சம் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் மற்றும் வேகத்திற்கு சாதகமாக உள்ளது என்று தெரிவித்தார். நாளைய ஆட்டத்தை பொறுத்தவரை இந்திய அணி 200 ரன்களுக்கும் ஆஸ்திரேலியா அணியை ஆல் அவுட் செய்தால், 2வது இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.