சிட்னி: ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவின் விக்கெட்டை பும்ரா வீழ்த்திய அடுத்த நொடியே, மொத்த இந்திய அணியும் மறுமுனையில் நின்றிருந்த சாம் கான்ஸ்டஸ் பக்கம் திரும்பி ஆக்ரோஷமாக கொண்டாடிய சம்பவம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் 19 வயதாகும் சாம் கான்ஸ்டஸ் ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டார். முதல் இன்னிங்ஸிலேயே பும்ராவின் அட்டாக் செய்ததால், ஆஸ்திரேலியா ரசிகர்கள் அவரை கொண்டாடி வந்தனர். ஆனால் அடுத்த இன்னிங்ஸிலேயே பும்ரா அவரின் விக்கெட்டை எளிதாக வீழ்த்தி பதிலடி கொடுத்தார். ஆனாலும் கான்ஸ்டஸின் செயல்பாடுகள் இந்திய அணிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே பும்ராவை வம்புக்கு இழுத்ததால், விராட் கோலி கான்ஸ்டஸ் உடன் மோதி சர்ச்சை ஏற்பட்டது. தொடர்ந்து இந்திய அணி வீரர்களையும், இந்திய அணி ரசிகர்களையும் எரிச்சலைய வைக்கும் வகையில் கான்ஸ்டஸ் செயல்பட்டு கொண்டே இருந்தார். அதேபோல் ஆஸ்திரேலியா அணியும் பும்ராவின் கவனத்தை திருப்புவதற்கும், அவரின் பவுலிங்கை சமாளிப்பதற்காகவும் கான்ஸ்டஸை பயன்படுத்தி வந்தது.
இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 185 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. தொடர்ந்து முதல் நாளின் கடைசி 15 நிமிடங்களில் இந்திய அணிக்கு பவுலிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் கவாஜா - கான்ஸ்டஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
அவர்கள் இருவரும் பும்ராவின் பந்தில் விக்கெட்டை கொடுத்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர். அதற்காக நேரத்தை கடத்தும் திட்டத்தையே செயல்படுத்த தொடங்கினர். ஒவ்வொரு பந்துக்கும் இடையில் பேசுவது, கிளவுஸை கழற்றி தயாராவது, பிசியோதெரபிஸ்டை அழைப்பது என்று கவாஜாவின் செயல்பாடுகள் இந்திய அணி வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஒரு கட்டத்தில் கவாஜா பேட்டிங்கிற்கு தயாராகவே நேரம் எடுத்து கொண்டதால், பும்ரா விரக்தியை வெளிப்படுத்தினார். இதனை பார்த்த சாம் கான்ஸ்டஸ் உடனடியாக பும்ராவை பார்த்து என்ன என்பது போல் கைகளை உயர்த்தினார். இதன்பின் களத்திலேயே பும்ரா நேரடியாக கான்ஸ்டஸ் உடன் மோதலில் ஈடுபட்டார். கடந்த போட்டியில் விராட் கோலி, இம்முறை பும்ரா என்று கான்ஸ்டஸ் மோதியது ரசிகர்களுக்கும் எரிச்சலைய வைத்தது.
இந்த நிலையில் ஆட்டத்தின் கடைசி பந்தில் கவாஜாவை 2 ரன்களில் வீழ்த்தி பும்ரா பதிலடி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் கவாஜா விக்கெட்டை வீழ்த்திய அடுத்த நொடி இந்திய அணியின் 11 வீரர்களும் மொத்தமாக சாம் கான்ஸ்டஸ் பக்கம் திரும்பி ஆக்ரோஷமாக கொண்டாடினர். விக்கெட்டான கவாஜாவை ஒருவர் கூட சீண்டவில்லை.
அதிலும் ஸ்லிப் திசையில் ஃபீல்டிங் நின்றிருந்த விராட் கோலி நேராக ஓடி வராமல் சாம் கான்ஸ்டஸ் பக்கம் நெருக்கமாக வந்து ஆக்ரோஷமாக கொண்டாடினார். இதனால் வேறு வழியின்றி சாம் கான்ஸ்டஸ்-ம் அமைதியாக பெவிலியன் நோக்கி நடந்து சென்றார். இதனால் 2வது நாளில் பும்ரா - கான்ஸ்டஸ் இடையிலான ஆட்டம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.