மும்பை : பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் போதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி பெர்த் நகரில் நடைபெறுகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு பல தலைவலி ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பாக இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் கில் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதேபோன்று கே எல் ராகுல் பயிற்சி டெஸ்டில் காயம் ஏற்பட்டு தற்போது ஓய்வில் இருக்கிறார். எனினும் அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கு அணிக்கு திரும்பி விடுவார் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் இந்திய அணியில் இரண்டு முக்கிய வீரர்கள் இல்லை என்றால் அவர்களுக்கு பதில் யார் விளையாட போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் விலகிய நிலையில் சர்பராஸ் கானுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அதனை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதல் டெஸ்டில் 150 ரன்கள் சர்பராஸ் கான் குவித்தார். அடுத்த நான்கு இன்னிங்ஸ்களும் கடுமையாக தடுமாறினார்.
இந்த சூழலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் இடம்பெறுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால் கம்பீர், சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்காமல் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய துருவ் ஜூரல் மற்றும் தேவுதட் படிக்கல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க முடிவெடுத்து இருக்கிறார்.அதேபோன்று ரோகித் சர்மாவுக்கு பதில் அபிமன்யு ஈஸ்வரன் விளையாட வைக்க முடிவெடுத்திருக்கிறார்.
இதனால் சர்பராஸ் கானுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்காது என்பது தெரிய வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு இரண்டு நாள் பயிற்சி ஆட்டம் ஒன்று நடைபெற இருக்கிறது. அதில் சர்பராஸ்கான் விளையாடப் போகிறார். அதில் அவர் எவ்வாறு விளையாடுகிறார்? எவ்வாறு களத்தில் செயல்படுகிறார் என்பதை வைத்து அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு வழங்கலாமா வேண்டாமா என்று முடிவு எடுக்கப்படும்.