அடிலெய்ட் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அடிலெய்ட் நகரில் தொடங்குகிறது.
இந்த போட்டிக்கு இரு அணி வீரர்களும் தயாராகி வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் காயம் காரணமாக விலகி இருக்கிறார். இதனால் ஆஸ்திரேலியா அணியில் ஸ்காட் போலாந்து என்ற வேகப்பந்துவீச்சாளர் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இது குறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சீசன் தொடக்கத்தில் நான் பெரிய அளவு கிரிக்கெட் விளையாடவில்லை.
ஆனால் தற்போது பல ஆட்டங்களில் விளையாடி மனதளவிலும், உடல் அளவிலும் சிறப்பாக உணர்கிறேன். இந்த சீசன் தொடக்கத்தில் சில காயத்தால் அவதிப்பட்டேன். தற்போது 100 சதவீதம் உடல் தகுதியை எட்டி இருக்கின்றேன். நான் பந்து வீசும் விதம் எனக்கு நம்பிக்கையை கொடுக்கின்றது. நாங்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் தான் தோல்வியை தழுவினோம்.
ஆனால் தொடரை இழந்தது போல் பலரும் விமர்சித்து வருகிறார்கள். தேவை இல்லாமல் அச்சப்பட வேண்டிய சூழல் இல்லை. அது மட்டும் இல்லாமல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்களின் விக்கெட்டை வீழ்த்த நாங்கள் சிறப்பு திட்டம் தீட்டியிருக்கின்றோம். ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒவ்வொரு யுக்திகளை நாங்கள் வகுத்திருக்கிறோம்.
அந்தத் திட்டத்தை பற்றி தற்போது உங்களிடம் நான் ஏதும் சொல்ல மாட்டேன். பெர்த் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டார். கே எல் ராகுல் களத்தில் நிலைத்து நின்று விளையாடினார். இதற்கு தகுந்தார் போல் எங்களுடைய திட்டத்தையும் நாங்கள் கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கிறோம்.
அணியில் உள்ள தனிப்பட்ட வீரர்களிடம் அவர்களுடைய செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கிறது. அனைவரும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்.