சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் ஓய்வறை விவகாரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் சீனியர் வீரர் ஒருவர் இடைக்கால கேப்டன் பொறுப்புக்காக அரசியல் செய்து வருவதாகவும் தகவல் வந்துள்ளது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி அடைந்த தோல்வி, ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை இழக்க போராடி வரும் சூழல் பல்வேறு சிக்கலை பிசிசிஐ-க்கு உருவாக்கி வருகிறது. ஏனென்றால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கேப்டன்சியில் இருந்து விலக முன் வராத சூழலில், அடுத்த கேப்டனுக்கான போட்டி இந்திய அணியில் துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 15 இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மொத்தமாகவே 165 ரன்களை தான் சேர்த்திருக்கிறார். இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறவில்லை என்றால், இந்திய அணி புதிய கேப்டனுடன் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசனை தொடங்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணி தயாராகி வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் ஓய்வறையில் நடக்கும் சில விஷயங்கள் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு பின் பயிற்சியாளர் கம்பீர், 3 வீரர்களை கடிந்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
இதுவரை நடந்தது போதும்.. இனி நான் சொல்வதை போல் விளையாடுங்கள்.. இந்திய அணியின் சூழலை கருத்தில் கொண்டு தன் இஷ்டத்திற்கு விளையாடினால், அவர்களை பெஞ்ச் செய்யவும் தயங்க மாட்டேன் என்று கம்பீர் வார்னிங் கொடுத்துள்ளார். அதேபோல் இந்திய அணியின் இடைக்கால கேப்டன் பொறுப்பை ஏற்ப சீனியர் வீரர் ஒரு முயற்சித்து வருவதாக தகவல் வெளி வந்துள்ளது.
பெர்த் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்பது உறுதியான போது, சில வீரர்கள் வெளிப்படையாக இடைக்கால கேப்டனாக முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதேபோல் இந்த டெஸ்ட் தொடரில் ஏதேனும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியாக கூறி வந்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் சூழலை தன்னால் சிறப்பாக கையாள முடியும் என்று அரசியல் செய்வதாகவும், இளம் வீரர்களுக்கு கேப்டன்சி செய்ய போதுமான அனுபவம் இல்லை என்றும் கூறி வருகிறாராம். இதனால் ரசிகர்களின் பார்வை விராட் கோலி மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகிய இருவரை நோக்கி திரும்பியுள்ளது.
அதேபோல் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ரோஹித் சர்மா மோசமான ஃபார்மில் இருக்கும் போது, இந்திய அணியின் ஓய்வறை ரகசியங்கள் இப்படி கசிவது தொடர் கதையாகி வருகிறது. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின் ரோஹித் சர்மா உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த போது, விராட் கோலி - கங்குலி இடையிலான மோதல் வெளி வந்தது.
அதன்பின் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பின் தேர்வு குழு தலைவர் சர்ச்சை வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து கடந்த ஆண்டு மும்பை அணியின் கேப்டன்சியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்ட பின், மும்பை அணியின் ஓய்வறை ரகசியங்கள் கசிந்தது குறிப்பிடத்தக்கது.