மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்வி, தொடரில் ஆஸ்திரேலியாவை 1-0 என முன்னிலை பெற வைத்தது மட்டுமல்லாமல், இந்திய அணியின் இரண்டு முக்கிய வீரர்களின் வரலாற்று சாதனைக்கும் முற்றுப்புள்ளியை வைத்துள்ளது. மெல்போர்ன் போட்டியில் இந்திய அணி மோசமாக ஆடி வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி இந்த இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் 'ராசியான' வீரர்களாகக் கருதப்பட்ட ஆல்-ரவுண்டர் சிவம் துபே மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்ற போட்டிகளில், இந்திய அணி தோல்வியே சந்திக்காது என்ற நிலை இருந்தது. 2019க்கு பிறகு சிவம் துபே இந்திய டி20 அணியில் பங்கேற்ற போட்டிகளில் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் இருந்தது.
அதே போல பும்ரா கடந்த 2021 முதல் இந்திய டி20 அணியில் இடம் பெற்று ஆடிய போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் இருந்தது இந்திய அணி. இந்த இரண்டு நீண்டகால சாதனைகளும், இந்த மெல்போர்ன் தோல்வியால் தகர்க்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் சிவம் துபே, சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து 37 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் உலக சாதனை படைத்திருந்தார். இதுவரை எந்த வீரரும் இத்தனை அதிக போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் ஆடியதில்லை. இந்த மெல்போர்ன் போட்டிக்கு முன்பு வரை, அவர் விளையாடிய எந்த டி20 போட்டியிலும் இந்திய அணி தோற்றதில்லை.
கடைசியாக, டிசம்பர் 2019-ல் திருவனந்தபுரத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அவர் விளையாடிய போட்டியில்தான் இந்தியா தோல்வியடைந்திருந்தது. அதன்பிறகு, சுமார் 6 ஆண்டுகளாக நீடித்த அவரது சாதனை இன்று முடிவுக்கு வந்துள்ளது.
இதேபோல், இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும், தொடர்ந்து 24 டி20 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் இருந்தார். கடைசியாக, அக்டோபர் 2021-ல் துபாயில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில்தான் அவர் தோல்வியைச் சந்தித்திருந்தார். அதன்பிறகு, சுமார் 4 ஆண்டுகளாக நீடித்த அவரது சாதனைக்கும் இன்று ஆஸ்திரேலியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில், தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மாவின் அதிரடியான ஆட்டம் மட்டுமே ஆறுதலாக அமைந்தது. அவர் 37 பந்துகளில் 68 ரன்களை எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
சுப்மன் கில் 5 ரன்கள், சாம்சன் 2 ரன்கள், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன், திலக் வர்மா டக் அவுட் என முன்னணி வீரர்கள் அனைவரும் ஹேசில்வுட் மற்றும் நாதன் எல்லிஸின் துல்லியமான பந்துவீச்சில் வீழ்ந்தனர். இதனால், இந்திய அணி 18.4 ஓவர்களில் வெறும் 125 ரன்களுக்குச் சுருண்டது.
எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா, கேப்டன் மிட்செல் மார்ஷின் அதிரடியான ஆட்டத்தால் விரைவாக ரன் சேர்த்தது. அவர் 26 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார். டிராவிஸ் ஹெட் 15 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்திய பந்துவீச்சில் பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், இலக்கு மிகவும் குறைவாக இருந்ததால் அவர்களால் தோல்வியைத் தடுக்க முடியவில்லை.