டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மாவை இளம் வீரர் சுப்மன் கில் கேப்டனாக வழிநடத்துவது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் அதிரடி கருத்தைத் தெரிவித்துள்ளார். கேப்டன்சி மாற்றம் நிகழ்ந்த விதத்தைக் கருத்தில் கொள்ளும்போது, நட்சத்திர வீரரான ரோஹித்தை வழிநடத்தும் போது கில் குற்ற உணர்ச்சியுடன் இருக்கக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த ஒருநாள் தொடர் தொடங்குவதற்குச் சற்று முன்புதான், ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக சுப்மன் கில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கேப்டன் பதவியை இழக்கும் அளவுக்கு ரோஹித் சர்மா எந்தத் தவறும் செய்யவில்லை. அதை நினைத்து சுப்மன் கில் குற்ற உணர்ச்சியில் இருப்பார் என்று கைஃப் கூறி இருக்கிறார்.

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய முகமது கைஃப், "எந்தவொரு புதிய கேப்டனுக்கும் நேரம் எடுக்கும். இப்போது, கில்லுக்குக் கீழ், தன்னை ஒரு தலைவராக நிரூபித்த ரோஹித் சர்மா விளையாடுகிறார். ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா எந்தத் தவறும் செய்யவில்லை என்பது கில்லுக்கும் தெரியும். அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கில் தனது ஹோட்டல் அறையில் உறங்கச் செல்லும்போது, 'ரோஹித் பாய் எந்தத் தவறும் செய்யவில்லையே' என்று நிச்சயம் நினைப்பார்."
"அவருக்குள் ஒரு குற்ற உணர்ச்சி இருக்கலாம், 'மக்கள் என்னை ஆதரிக்கிறார்கள், ஆனால் ரோஹித் பாய் பற்றி யோசித்துப் பாருங்கள், அவர் சிறப்பாகச் செயல்பட்டு கோப்பைகளை வென்றார், ஆனாலும் அவர் நீக்கப்பட்டு நான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளேன்' என்று அவர் உணரக்கூடும்." என்று கூறியுள்ளார்.
கைஃப் மேலும் கூறுகையில், "அதிகப்படியான போட்டிகளால் ஏற்படும் சோர்வு, தொடர்ச்சியான பயணம், மற்றும் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்களை வழிநடத்தும் சவாலான பணி என அனைத்தையும் கருத்தில் கொள்ளும்போது, கில்லுக்கு இது கடினமான காலமாகவே இருக்கும். ஒருநாள் கேப்டனாக இது அவருக்கு ஒரு மாற்றத்திற்கான காலகட்டம். அவர் எப்போதெல்லாம் ரோஹித் மற்றும் கோலியை வழிநடத்துகிறாரோ, அப்போதெல்லாம் அவர் பதற்றமாக உணர்வார்." என்றார்.
கில்லின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் ஃபார்ம் குறித்துப் பேசிய கைஃப், "இது பேட்டில் இருந்து ரன்கள் வராத நேரம். நாம் ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரை இழந்துள்ளோம். கடைசியாக எப்போது நாம் ஒரு இருதரப்பு தொடரை இழந்தோம் என்பது கூட எனக்கு நினைவில் இல்லை. இவையெல்லாம் அவரது கேப்டன்சியின் கீழ் நடந்துள்ளது, இது நடந்தே ஆக வேண்டிய ஒன்று" என்றார்.
புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது. இந்நிலையில், மூத்த வீரர்களை வழிநடத்துவது இளம் கேப்டனுக்கு மனதளவில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற முகமது கைஃப்பின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.