பெர்த்: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெர்த் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் மழை அடிக்கடி குறிக்கிட்டதால் போட்டி 26 ஓவராக குறைக்கப்பட்டது. இதனால் பேட்டிங்கில் இந்திய அணி கவனச் சிதறலால் பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 21.1 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், பவர் பிளேவில் மூன்று விக்கெட்டுகளை இழந்ததே காரணம் என்று குறை கூறியுள்ளார். ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நீண்ட நாட்களுக்குப் பின் இந்திய அணிக்கு திரும்பிய நிலையில் ரோகித் 8 ரன்களிலும், விராட் கோலி டக் அவுட்டாகியும் ஆட்டம் இழந்தார்.
கேப்டன் கில் 10 ரன்களிலும், ஸ்ரேயாஸ் 11 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கில், பவர்பிளேவில் மூன்று விக்கெட்டுகளை இழந்தால் நாம் எவ்வளவுதான் போராடினாலும் பெரிய ஸ்கோர் எடுப்பது சிரமமாகிவிடும். அதுவும் மழையும் அடிக்கடி குறிக்கிட்டு போட்டியை நிறுத்தியது. இதனால் மீண்டும் மீண்டும் ஆட்டம் தொடங்கியதில் எங்களுடைய கவனமும் சிதறியது.
இந்த போட்டியில் இருந்து நாங்கள் பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கின்றோம். பல நல்ல விஷயங்களும் நடந்து இருக்கின்றது. நாங்கள் 13 ரன்கள் தான் தற்காத்துக் கொண்டுள்ளோம். ஆனால் இதை வைத்து நாங்கள் சமாளித்தோம் என்று நினைக்கின்றேன். கடைசிவரை போட்டி செல்லவில்லை என்றாலும் இறுதி கட்டத்திற்கு ஆட்டத்தை நகர்த்தி சென்றோம்.
இது எங்களுக்கு திருப்தியை கொடுத்தது. நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுக்கு ரசிகர்கள் வந்து ஆதரவு தருவதை அதிர்ஷ்டமாக நினைக்கின்றேன் என்று அதிகளவு வந்திருக்கிறார்கள். அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதிக அளவு ரசிகர்கள் வருவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.