சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அவர் பொறுப்பற்ற முறையில் விளையாடி தன்னுடைய விக்கெட்டை ஆஸ்திரேலிய வீரர்களுக்கு புத்தாண்டு பரிசாக வழங்கியிருக்கிறார்.
இதன் மூலம் இந்திய அணி மதிய நேர உணவு இடைவேளையின் போது 57 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. சிட்னி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை இந்திய அணியால் சமன் செய்ய முடியும்.

இல்லையென்றால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர் கவாஸ்கர் தொடரை இந்தியா இழக்க நேரிடும். இந்த நிலையில் இந்திய அணியின் ஸ்டார் வீரரான கில், டெஸ்ட் போட்டிகளில் குறிப்பாக இந்தியாவுக்கு வெளியே சரியாக விளையாடுவதில்லை என்ற விமர்சனம் இருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு கில் ஒரு முறை கூட வெளிநாட்டில் அரை சதம் அடிக்கவில்லை.
இதனால் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் கில் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் ரோகித் சர்மா சிட்னி டெஸ்டில் விளையாடாத நிலையில் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ராகுல் நான்கு ரன்களிலும், ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, கில் பொறுப்பான முறையில் முதலில் விளையாடினார்.
ஆஸ்திரேலியாலின் பந்துவீச்சை லாவகமாக எதிர் கொண்டு கில் ரன்கள் சேர்த்தார். இதனால் கில் மீது ரசிகர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. இந்த நிலையில் மதிய உணவு நேர இடைவேளைக்கு முன் கடைசி ஓவரை ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் லயன் வீசினார். இந்த ஓவரை கில் நினைத்திருந்தால் பொறுமையாக எதிர்கொண்டிருக்க முடியும்.எனினும் அந்த ஓவரின் கடைசி பந்தில் தேவையில்லாமல் இறங்கி வந்து டி20 கிரிக்கெட் விளையாடுவது போல் கில் ஆடினார்.
அப்போது பந்து எட்ஜாகி ஸ்மித் இடம் கேட்ச் ஆனார். 20 ரன்களில் கில் ஆட்டமிழக்க இந்திய அணி 25 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. பொறுப்பற்ற முறையில் ஷார்ட் ஆடி ஆட்டமிழந்த கில்லை ரசிகர்கள் வெளுத்து வாங்குகின்றனர். இதன் மூலம் கில் போன்ற வீரர்கள் இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் சேர்க்கக்கூடாது என்று ரசிகர்கள் கடும் விமர்சனத்தை வைத்திருக்கிறார்கள். இதனால் ஸ்டுப்பிட் (stupid) ,ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் என்ற டேக் தற்போது X தளத்தில் டிரெண்டாகி வருகிறது.