மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, ஆஸ்திரேலிய ஊடகங்களை கடுமையாக சாடி இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலியா ஊடகங்கள் இந்திய அணியை குறைத்து மதிப்பிட்டு இருந்தார்கள். நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் பூஜ்ஜியத்துக்கு மூன்று என்ற கணக்கில் இந்திய அணி தோற்றதது.

இதனால் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி தங்கள் அணியால் ஊதி தள்ளப்படும் என்று ஆஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. ஆனால் தற்போது என்ன நடந்தது என்று பாருங்கள்! முதல் டெஸ்ட் போட்டியில் யார், யாரை ஊதி தள்ளியது என்று நன்றாகவே தெரிந்திருக்கும். இந்திய கிரிக்கெட் அணியில் பல திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அவர்கள் இந்த தொடரில் நன்றாக விளையாட முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதன் காரணமாக இது ஆஸ்திரேலியாவுக்கு நீண்ட நெடிய ஒரு தொடராக அமைந்து விடும். இந்திய அணியில் பும்ரா, கோலி, ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பாக விளையாடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதுவும் 22 வயதில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக ஜெய்ஸ்வால் விளையாடுகிறார். இதேபோன்று நிதிஷ் ரெட்டியும் முதல் டெஸ்டில் விளையாடுகிறார். ஆனால் பெரிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போட்டியில் விளையாடுகிறோம் என்ற பதற்றமே இல்லாமல் இந்த இளம் வீரர்கள் இருக்கிறார்கள். இதுதான் இந்திய கிரிக்கெட் தற்போது அடைந்திருக்கும் நிலையாகும் .
ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமானது. அடிலே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நல்ல ரெகார்ட் வைத்திருக்கிறது. அடுத்த டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன் என்று கங்குலி தெரிவித்துள்ளார். தற்போது இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு வந்து இருக்கிறார். இந்திய அணி வரும் நவம்பர் 30ஆம் தேதி இரண்டு நாள் பயிற்சி ஆட்டம் ஒன்றில் பங்கேற்கிறது. இதில் ரோகித் சர்மா விளையாடுவார் என தெரிகிறது. இதனை தொடர்ந்து வரும் ஆறாம் தேதி இந்திய அணி அடிலெய்டில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.