மும்பை : இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து பல வீரர்களும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் வேகப்பந்து வீச்சு சாதகமான ஆடுகளத்தில் எத்தனை சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் என மூன்று வீரர்கள் உள்ள நிலையில் இதில் யாருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு தரலாம் என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கங்குலி இந்த விவாதத்திற்கு இடமில்லை.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கண்டிப்பாக அஸ்வின் இருக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த சுழற் பந்துவீச்சாளர் என்றால் அது அஸ்வின் தான். எனவே அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுங்கள். அது மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா அணியில் நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் பிளேயிங் லெவனனில் இருக்கிறார்கள்.
இதனால் அஸ்வின் பந்து வீசும் போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். அது மட்டுமல்லாமல் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என இருவருமே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு நன்றாக செயல்படுவார்கள். ஆனால் முதல் டெஸ்டில் உங்களுடைய சிறந்த ஸ்பின்னர் தான் இருக்க வேண்டும். ஆல்ரவுண்டர்களை நம்பாமல் ஸ்பெசலிஸ்ட் வீரர்களை தேர்வு செய்யுங்கள்.
அப்படி இருக்கும் பட்சத்தில் அஸ்வின் தான் என்னுடைய முதல் முடிவாக இருப்பார் என்று கங்குலி தெரிவித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா, கில் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ள நிலையில், இந்திய அணி பேட்டிங்கை பலப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
இதனால் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தலாமா இல்லை ஜடேஜாவுக்கு பதில் அஸ்வினை போட்டிகள் சேர்க்கலாமா என்ற குழப்பம் இந்திய அணியில் இருக்கின்றது. இந்த சூழலில் முன்னாள் கேப்டனான கங்குலி அஸ்வினை சேருங்கள் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.