துபாய்: இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அக்சர் படேல் ஸ்டீவ் ஸ்மித்திற்கு வீசிய பந்து ஒன்று, ஸ்டம்பில் பட்டு சென்ற போது, பைல்ஸ் கீழே விழாது இருந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் கானலி - டிராவிஸ் ஹெட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் முகமது ஷமி வேகத்தில் கானலி டக் அவுட்டாகி வெளியேறினார்.

இதன்பின் அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசி தள்ளினார். ஆனால் அவரை தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தனது 2வது பந்திலேயே 39 ரன்களுடன் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். இதன்பின் ஸ்டீவ் ஸ்மித் - லபுஷேன் கூட்டணி இணைந்தது. இதில் ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்தினால், எளிதாக ஆட்டம் இந்திய அணியின் கைகளுக்கு வரும் என்று பார்க்கப்பட்டது.
இதனால் ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்த அவரின் வீக்னஸான இடதுகை ஸ்பின்னர்களை கேப்டன் ரோஹித் சர்மா அட்டாக்கில் கொண்டு வந்தார். முதலில் ஜடேஜா அட்டாக்கில் வருவார் என்று பார்க்கப்பட்ட போது, அக்சர் படேல் பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார். இதனால் அக்சர் படேலின் பந்தை ஸ்டீவ் ஸ்மித் கூடுதல் எச்சரிக்கையுடன் விளையாடினார்.
அதேபோல் ஸ்பின்னர்கள் அட்டாக்கில் வந்தபின் ஆஸ்திரேலியா அணியின் ரன் ரேக் குறைந்தது. இதனால் விரைவாக ரன்கள் சேர்க்க வேண்டிய தேவையும் எழுந்தது. இந்த நிலையில் 14வது ஓவரை வீச மீண்டும் அக்சர் படேல் வந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் ஸ்டீவ் ஸ்மித் பேட்டில் பந்து பட்டு இன்சைட் எட்ஜானது. அதன்பின் உருண்டு சென்ற பந்து, ஆஃப் ஸ்டம்பில் அடித்தது.
அப்போது பைல்ஸ் கீழே விழும் என்று பார்க்கப்பட்ட போது, அது அசையவே இல்லை. இதனை கண்கொத்தி பாம்பு போல் ஸ்டீவ் ஸ்மித் அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டே இருந்தார். சர்வதேச கிரிக்கெட் விதிகளின்படி பந்து ஸ்டம்பில் அடித்து பைல்ஸ் வீழே விழுந்தால் மட்டுமே அவுட் கொடுக்கப்படும். இதனால் இந்திய அணி வீரர்கள் சோகமடைந்தனர்.