மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவி இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் டெஸ்ட் போட்டி தொடங்கி இரண்டரை நாட்களுக்குள்ளேயே போட்டி முடிவடைந்து விட்டது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டத்தில் மிக குறைந்த அளவில் ஓவர்கள் வீசி முடிவுகள் காணப்பட்டதே இந்த போட்டியில் தான். இதனால் தற்போது இந்திய அணி வீரர்களுக்கு கூடுதலாக இரண்டு நாட்கள் ஓய்வு கிடைத்திருக்கிறது.

இனி இதை ஐந்து டெஸ்ட் போட்டி என மறந்து விடுங்கள். இனிமேல் இது மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தான். எனவே இந்திய அணி வீரர்கள் அடுத்த இரண்டு நாட்களை சரியான முறையில் பயிற்சிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஹோட்டல் ரூமில் அடைந்து கொள்ளாதீர்கள். நீங்கள் கிரிக்கெட் விளையாட தான் இங்கு வந்திருக்கிறீர்கள்.
நான் உங்களை ஒருநாள் முழுவதும் கிரிக்கெட் பயிற்சி செய்ய கூறவில்லை. காலையிலோ, இல்லை மாலையிலேயோ ஒரு செஷன் பயிற்சி செய்து கொள்ளுங்கள். இந்த இரண்டு நாட்களிலும் வீணடித்து விடாதீர்கள். நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி அது ஐந்து நாட்களும் முழுவதையும் நடந்து நீங்கள் ஓய்வு எடுத்தால், அதனை கூட ஒப்புக் கொள்ளலாம்.
மீண்டும் நீங்கள் உங்கள் ரிதம்மை கண்டுபிடிக்க வேண்டும். பேட்டிங்கில் யாரும் ரன்கள் சேர்க்கவில்லை. பவுலர்களும் சரியாக பந்து வீசவில்லை. எனவே பயிற்சிக்கு வருபவர்கள் வரலாம் என்ற ஆப்ஷன் இருக்கக்கூடாது. பயிற்சியாளர் மற்றும் கேப்டன் தான், நீ அதிகம் ஓவர் வீசி விட்டாய்! நீ அதிக ரன்கள் அடித்து விட்டாய். இன்று பயிற்சிக்கு நீ வர வேண்டாம் என்று கூற வேண்டுமே தவிர வீரர்களிடம் நீங்கள் வந்தால் வாருங்கள் என்று கூறினால் பெரும்பான்மையான வீரர்கள் பயிற்சிக்கு வராமல் ஹோட்டல் ரூமில் தங்கி விடுகிறேன் என்று தான் கூறுவார்கள்.
இந்திய கிரிக்கெட் அப்படி ஒரு வரலாற்றை கொண்ட அணி கிடையாது. இந்திய அணிக்காக விளையாடுவதை பெருமையாக நினைத்துக் கொள்ளுங்கள். ஆஸ்திரேலிய தொடரில் நீங்கள் மொத்தம் 57 நாட்கள் இருக்கப் போகிறீர்கள். இதில் 5 டெஸ்ட் ஐந்து நாட்கள் விளையாடி இருந்தால் 25 நாட்கள் தான் டெஸ்ட் விளையாடுவீர்கள் கூடுதலாக இரண்டு நாள் பயிற்சி ஆட்டம் விளையாடி இருப்பீர்கள்.
எனவே 57 நாட்களில் நீங்கள் 30 நாட்கள் சும்மா தான் இருக்கப் போகிறீர்கள். தற்போது ஒரு நாள் பெர்தில் கூடுதலாக உங்களுக்கு கிடைத்தது. தற்போது இரண்டு நாட்களுக்கு முன்பே போட்டி முடிவடைந்து விட்டதால் தற்போது ஒரு இரண்டு நாட்கள் கிடைத்து இருக்கிறது. எனவே இந்த நேரத்தை வீணடிக்காமல் தயவு செய்து களத்திற்கு வந்து பயிற்சி செய்யுங்கள் என கவாஸ்கர் கூறியிருக்கிறார்.