சிட்னி: இந்திய அணியின் முதன்மை வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தான் உலகிலேயே சிறந்த கிரிக்கெட் வீரர் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி இருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட 2024 - 25 பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்து இருக்கிறது.
இந்த தொடரில் இந்திய அணி மிக மோசமாக செயல்பட்டது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றது. மற்ற நான்கு போட்டிகளில் ஆஸ்திரேலியா மூன்று வெற்றிகளை பெற்றது. இதை அடுத்து 3 - 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது.

ஆஸ்திரேலியா அணி பார்டர் - கவாஸ்கர் ட்ராபியை 10 ஆண்டுகளுக்குப் பின் கைப்பற்றியது. இந்திய அணி மோசமாக செயல்பட்ட போதும் பும்ரா மட்டுமே இந்த தொடரில் இரண்டு அணிகளிலும் சேர்த்து பார்த்தாலும் சிறப்பாக செயல்பட்ட வீரராக இருந்தார். அவர் இந்த தொடரில் 9 இன்னிங்ஸ்களில் மட்டுமே பந்து வீசினார். அதில் மட்டும் 32 விக்கெட்களை வீழ்த்தினார்.
அதன் மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளராகவும் இருந்தார். மேலும், அவர் 13.06 என்ற பவுலிங் சராசரியை வைத்து இருந்தார். இது போன்ற குறைந்த பவுலிங் சராசரியுடன் அவர் 32 விக்கெட்களை வீழ்த்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்த தொடரின் முடிவில் பும்ராவுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட் தொடர் பற்றி சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஆஸ்திரேலியாவை அவர் பாராட்டி இருக்கும் அதே சமயம், பும்ராவை உலகின் சிறந்த வீரர் என குறிப்பிட்டு இருக்கிறார். அது நெகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது.
சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டு இருக்கும் அந்தப் பதிவில், "இந்த தொடரில் 0 - 1 என்ற நிலையில் இருந்து, 3 - 1 என தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணியின் அதிகாரம் மிக்க செயல்பாட்டை வெளிக்காட்டுகிறது. அவர்கள் பார்டர் - கவாஸ்கர் ட்ராபியை வென்றதற்கு பாராட்டுக்கள். இங்கே நான் ஜஸ்பிரித் பும்ரா பற்றி சிறப்பாக குறிப்பிட விரும்புகிறேன். "ஜஸ்.. இந்த உலகின் சிறந்த வீரர்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.