சிட்னி: இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரையும் களத்தில் நேரடியாக பார்க்க இதுவே கடைசி வாய்ப்பு என்று ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இந்த ஒருநாள் தொடரை காயம் காரணமாக தவறவிட்டது என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஏமாற்றம் என்று கூறியுள்ள அவர், அவர்கள் இருவரும் பேட்டிங் ஆடும் போது மைதானத்தில் ஆரவாரம் உச்சத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 19ஆம் தேதி தொடங்க உள்ளது. ஏற்கனவே இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இருவரும் புதிய கேப்டனான சுப்மன் கில் தலைமையின் கீழ் விளையாட உள்ளனர்.

இதனால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் இது கடைசி தொடராக கூட இருக்கலாம் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளது. அதேபோல் மீண்டும் ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலியை பார்க்க முடியாது என்பதால், ஜாம்பவான் வீரரை காண வாருங்கள் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகமும் விளம்பரம் செய்து வருகிறது.
இதில் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸும் இணைந்திருக்கிறார். இதுதொடர்பாக பேட் கம்மின்ஸ் பேசுகையில், கடந்த 15 ஆண்டுகளில் இந்திய அணி விளையாடிய ஒவ்வொரு தொடரிலும் விளையாடியவர்கள் விராட் கோலியும், ரோகித் சர்மாவும். அவர்களை கடைசியாக ஆஸ்திரேலியா ரசிகர்கள் நேரில் பார்க்க ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் சாம்பியன் வீரர்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அவர்கள் இருவரும் எப்போது விளையாடினாலும், ரசிகர்கள் ஆரவாரம் உச்சத்திற்கு செல்லும். இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை தவறவிட்டிருப்பது எனக்கு ஒரு அவமானமாக கருதுகிறேன். நிச்சயமாக மைதானம் முழுக்க ரசிகர்கள் கூடி இருப்பார்கள்.
அதற்கேற்றபடி ஆஸ்திரேலியாவில் ஏராளமான பில்டக் கொடுக்கப்பட்டு வருகிறது. எந்தவொரு போட்டியை தவறவிட்டாலும் அது ஏமாற்றம் அளிக்கும். ஆனால் இந்திய அணிக்கு எதிராக இப்படியொரு தொடரை விளையாட முடியாமல் இருப்பது கொஞ்சம் கூடுதல் ஏமாற்றம். 3 ஒருநாள் போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
அதேநேரத்தில் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு அளித்து தயார் செய்ய வேண்டும். கடந்த உலகக்கோப்பையில் விளையாடாதவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க வேண்டும். அப்போதுதான் உலகக்கோப்பை நெருங்கும் போது ஆஸ்திரேலியா அணியை தயார் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.