மும்பை : இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான டிராவிஸ் ஹெட், பந்துவீச்சில் ரிஷப் பண்ட் விக்கெட்டை வீழ்த்தியது, இந்த போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியது. ரிஷப் பன்ட் மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பித்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிஷப் பன்ட். டிராவிஸ் ஹெட் பந்துவீச்சில் ஒரு பெரிய சாட் ஆட முற்பட்டு பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார். இதனை அடுத்து டிராவிஸ் ஹெட் இந்த விக்கெட்டை ஆபாசமாக கொண்டாடினார். தனது விரலை கையில் உள்ளே விட்டு அவர் இந்த விக்கெட்டை கொண்டாடினார்.
இதை பார்க்கும் போதே நாராசமாக இருந்தது. இந்த கொண்டாட்டத்திற்கு பின்னணி என்ன? ஏன் இவ்வாறு ஆபாசமாக செய்தார் என்று பலரும் மண்டையை பிய்த்து கொண்டு இருந்தனர். 2011- 12 சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நடுவிரலை உயர்த்தி ஆஸி.ரசிகர்களிடம் காட்டினார். அப்போது அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஹெட் செய்ததும் ஆபாசமான செயல் என்பதால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஆஸ்திரேலிய ஊடக நிபுணர் ஒருவர், ஹெட் செய்தது ஆபாசமான செயல் கிடையாது. அது ஒரு வெற்றி கொண்டாட்டம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

2022 ஆம் ஆண்டு டிராவிஸ் ஹெட் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்போது தனது விக்கெட்டுகளை ஐஸ் நிறைந்த கோப்பையில் போட்டு கலக்குவது போல் ஒரு புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் டிராவிஸ் ஹெட் வைத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு விக்கெட் தமக்கு கிடைத்திருப்பதை அந்த ஐஸ்கோப்பையில் போட்டு கலக்க போகிறேன் என்பதை தான் ஹெட் செய்ததாகவும், ஆனால் அது ஆபாசமாக இந்திய ரசிகர்களால் புரிந்து கொள்ளப்பட்டது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதேபோன்று இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், தனது கைவிரல் சூடாக இருப்பதாகவும் அதை ஐஸ் கோப்பையில் வைத்து நாதன் லயானுக்கு எதிராக ஹெட் கிண்டல் செய்ததாகவும் அதனை தான் அவர் மீண்டும் செய்து காட்டி இருக்கிறார் என்று கூறியுள்ளார்.