சிட்னி: ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 8 இன்னிங்ஸில் 6 முறை இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ராவிடம் விக்கெட்டை பறிகொடுத்து சென்றுள்ளார். இன்றைய ஆட்டத்தின் கடைசி பந்தில் கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தியதால், இந்திய அணி வீரர்கள் ஆக்ரோஷமாக கொண்டாடினர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியுடன்ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கில் கிளார்க் அறிவுறுத்தி வந்தார். அவருக்கு 38 வயதாகிவிட்டதால், இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதேபோல் பார்டர் கவாஸ்கர் டிராபியிலும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரேயொரு அரைசதம் மட்டுமே கவாஜா அடித்திருக்கிறார். இதனால் கவாஜா கடைசி ஆட்டத்தில் சிறந்த இன்னிங்ஸை ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் அதனை சாம் கான்ஸ்டஸ் தேவையில்லாமல் பும்ராவை உசுப்பேற்றிவிட்டு கவாஜா கதையை முடிக்க வைத்துள்ளார்.
வழக்கமாக டெஸ்ட் கிரிக்கெட்டின் அன்றைய நாளின் முடிவில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்கள் பவுலர்கள் பவுலிங் செய்ய வரும் போது, நேரத்தை கடத்துவதற்காக சில விஷயங்களை செய்வார்கள். அந்த வகையில் கடைசி 15 நிமிடங்களில் பவுலிங் செய்ய இந்திய அணி களமிறங்கிய போது, குறைந்தபட்சம் 5 ஓவர்களாவது வீச வேண்டும் என்று தீவிரம் காட்டியது.
ஆனால் முதல் ஓவரிலேயே உஸ்மான் கவாஜா விரலை அடிப்பட்டதாக பிசியோதெரபிஸ்டை வரவழைத்து பரிசோதினை செய்து நேரத்தை கடத்தினார். இதனால் 3 நிமிடங்கள் வரை ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதன்பின் மீண்டும் 3வது ஓவரை வீச பும்ரா வந்தார். அந்த ஓவரை விரைவாக முடிக்க வேண்டும் என்று பும்ரா விரைவாக தயாராகி பவுலிங் செய்து கொண்டிருந்தார்.
ஆனால் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் கவாஜா நேரத்தை கடத்துவதற்காக பேட்டிங் செய்ய தயாராகவே கூடுதல் நேரம் எடுத்து கொண்டார். இதனால் கடுப்பான பும்ரா, ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை நோக்கி விரக்தியடைவதாக சைகை காட்டினார். இதனை பார்த்த சாம் கான்ஸ்டஸ் கூடுதலாக நேரத்தை கடத்தும் நோக்கில், பும்ராவுடன் மோதலில் ஈடுபட்டார்.
இதன் காரணமாக இந்திய அணியின் கேப்டன் பும்ராவும் நேரடியாக கான்ஸ்டஸ் உடன் மோதினார். இதனை பார்த்த நடுவர் வேறு வழியின்றி சமாதானம் செய்து பும்ராவை அனுப்பி வைத்தார். தொடர்ந்து கான்ஸ்டஸ் சிரித்துக் கொண்டே வந்து கவாஜாவிடம் பேச, அவரும் சிரித்து கொண்டே பேட்டிங் செய்ய தயாராகினார்.
ஆனால் அந்த ஓவரின் கடைசி பந்தில் கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தி பும்ரா பதிலடி கொடுத்தார். இதனால் கவாஜா 2 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்ட, முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் மட்டும் 8 இன்னிங்ஸில் ஆடியுள்ள கவாஜா 6 முறை பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் பும்ராவின் 113 பந்துகளை எதிர்கொண்டுள்ள கவாஜா, 33 ரன்களை மட்டுமே சேர்த்து 6 முறை ஆட்டமிழந்திருக்கிறார். இதன் மூலமாக எதிரணியின் தொடக்க வீரரின் விக்கெட்டை ஒரே தொடரில் அதிக முறை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற ஜடேஜாவின் சாதனையை பும்ரா சமன் செய்துள்ளார். இதற்கு முன் 2016ல் இங்கிலாந்து தொடக்க வீரர் அலைஸ்டர் குக் விக்கெட்டை ஜடேஜா 6 முறை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.