துபாய்: ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இந்திய அணியின் முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் ரன்களை விட்டுக் கொடுத்த நிலையில், வருண் சக்கரவர்த்தி வீசிய முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். வெயில் அதிகம் இருந்ததால், ஸ்விங் குறைவாக இருக்கும் என்று ஆஸ்திரேலியா அணி இந்த முடிவை எடுத்தது.

இதன்பின் ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் - கூப்பர் கானலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை முகமது ஷமி வீசினார். ஆஸ்திரேலியா அணி நிதானமாக பேட்டிங் ஆடிய நிலையில், ஷமி பவுலிங்கில் கானலி டக் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் டிராவிஸ் ஹெட் - ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி இணைந்தது.
இதன்பின் ஹர்திக் பாண்டியா வீசிய 4வது ஓவரில் பவுண்டரி, சிக்சர் விளாசிய டிராவிஸ் ஹெட், ஷமி வீசிய 5வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி மிரட்டினார். இதன் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா உடனடியாக குல்தீப் யாதவை அட்டாக்கில் கொண்டு வந்தார். ஆனால் அவரின் பவுலிங்கிலும் ஒரு சிக்ஸ் விளாச, இந்திய ரசிகர்கள் கடவுளை வேண்ட தொடங்கினர்.
ஒரு பக்கம் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டி உள்ளிட்ட சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. இதனால் மீண்டும் ஒருமுறை இந்திய அணி டிராவிஸ் ஹெட்டிடம் சிக்கிக் கொண்டது என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 9வது ஓவரை வீச வருண் சக்கரவர்த்தி கொண்டு வரப்பட்டார். அவர் வீசிய 2வது பந்திலேயே இறங்கி வந்து டிராவிஸ் ஹெட் பேட்டை வீசினார்.
அந்த பந்து நேராக லாங் ஆஃப் திசையில் நின்றிருந்த சுப்மன் கில் கைகளுக்கு சென்று விழுந்தது. இதன் காரணமாக டிராவிஸ் ஹெட் 33 பந்துகளில் 39 ரன்கள் விளாசி ஆட்டமிழந்து வெளியேறினார். டிராவிஸ் ஹெட் விக்கெட் காரணமாக இந்திய அணி வீரர்களும், ரசிகர்களும் உற்சாகத்தில் எழுப்பிய கோஷம் விண்ணை பிளந்தது.