மும்பை : 2024 ஆம் ஆண்டில் மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக இந்தியா ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அமைந்திருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவி இருக்கிறது.
இந்த சூழலில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஃபார்ம் அவுட் ஆகி இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ரோகித் சர்மா,விராட் கோலி ஃபார்மில் இல்லை என்றாலும் இருவரும் அபாயகரமான வீரர்கள் தான் என ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய பேட் கம்மின்ஸ், இருவரும் பற்றி எதும் சொல்ல முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு வீரரும் நல்ல பார்மில் இருப்பார்கள். திடீரென்று பார்ம் அவுட் ஆவார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுபோல் நீண்ட காலமாக விளையாடினால் இதுபோல ஒரு ஏற்ற இறக்கத்தை நீங்கள் சந்தித்தே ஆகவேண்டும்.
எங்களுடைய பணி இந்திய வீரர்களை ரன் குவிக்க விடாமல் களத்தில் அமைதியாக்க வேண்டும். அதை நோக்கி தான் எங்கள் திட்டம் இருக்கிறது. இந்த இரண்டு வீரர்களும் ஃபார்மில் இல்லை என்றாலும், இந்தியாவின் அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கிறார்கள். எனவே என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
ரிஷப் பண்ட் எங்களுக்கு எதிராக நன்றாக கடந்த காலங்களில் விளையாடி இருக்கிறார். இதனால் அவரை கட்டுப்படுத்துவதற்கான ஒரு நல்ல திட்டத்தை நாங்கள் வைத்து இருக்கின்றோம். பண்ட் களத்தில் அதிரடியாக விளையாடத் தொடங்கினால் நிச்சயம் அபாயகரமான வீரராக திகழ்வார். களத்தில் ஒரே இடத்தில் நிற்காமல் நகர்ந்து விளையாட கூடிய வீரராகவும் அவர் உள்ளார்.
இதை வைத்து ரிஷப் பண்ட்க்காக நாங்கள் தீட்டிய திட்டம் பயனளிக்கும் என்று நம்புகிறோம் என கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் ரிஷப் பண்ட், இதுவரை ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 624 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் சராசரி 62 ரன்கள் ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 72 ஆகும். இதில் ஒரு சதம் இரண்டு அரை சதம் அடங்கும்.