மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்கள் தடுமாறி வரும் நிலையில், அணியின் இளம் வீரர்கள் நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அபாரமாக விளையாடி அசத்தியிருக்கிறார்கள்.
இதன் மூலம் மோசமான நிலையில் இருந்த இந்திய அணி தற்போது ஃபாலோ ஆனை மீட்டு தற்போது மெல்ல மீண்டு இருக்கிறது. ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கியது.இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் எடுக்க இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் தடுமாறியது.

குறிப்பாக ரோகித் சர்மா மூன்று ரன்களிலும், விராட் கோலி 36 ரன்களிலும் ஆட்டம் இழக்க 164 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. இந்த நிலையில் பாலோ ஆனை தவிர்க்க பண்ட், ஜடேஜா ஆகியோர் போராடினார்கள். ஆனால் இருவரும் பெரிய அளவில் சாதிக்கவில்லை.
எனினும் இளம் வீரர்களான நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஜோடி எட்டாவது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி 128 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் நிதிஷ் குமார் ரெட்டி 176 பந்துகளை எதிர் கொண்டு 105 ரன்கள் குவித்தார். மறுபுறம் அபாரமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 162 பந்துகளை எதிர்கொண்டு 50 ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம் இந்திய அணி தற்போது மூன்றாவது நாள் ஆட்டநேரம் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்திருக்கிறது. இது ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோரை விட 116 ரன்கள் குறைவாகும். இந்த சூழலில் விராட் கோலி, ரோகித் சர்மா, பண்ட் போன்ற வீரர்கள் பேட்டிங்கில் தடுமாறி வருகிறார்கள்.
இதில் ரோகித் சர்மாவின் போக்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இந்த சூழலில் சிட்னி டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுத்து ரோஹித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோரை நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களுக்கு பதிலாக துருவ் ஜூரல், சர்பராஸ் கான், பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.