பெர்த்: ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கு முன் இந்திய அணி வீரர்கள் பெர்த் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் நேற்று சாதாரண பயிற்சி நேரம் முடிந்த பின்னர் விருப்பப்பட்ட வீரர்கள் மட்டும் கூடுதல் பயிற்சி செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அப்போது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பெர்த் மைதானத்தில் கூடுதல் நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். பொதுவாக அவர்கள் இருவருமே கூடுதல் நேரத்தில் பயிற்சி மேற்கொள்ள மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 ஐபிஎல் தொடருக்குப் பிறகு எந்தவொரு போட்டியிலும் பங்கேற்காத விராட் கோலி, வலைப்பயிற்சியில் சிறிதும் தொய்வின்றி, ஒரு 'கிங்' போலக் காட்சியளித்தார். அவரது ஆட்டத்தில் எந்தவொரு தவறையும் காண முடியவில்லை.
இளம் வேகப்பந்து வீச்சாளர்களான ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொண்ட கோலி, மிகவும் நிதானமாகவும், அதே சமயம் தனது கிளாஸான ஷாட்களாலும் அசத்தினார். குறிப்பாக, ஹர்ஷித் ராணா வீசிய வேகமான பந்துகளை, கோலி எளிதாக எதிர்கொண்டார். சுமார் 40 நிமிடங்கள் பேட்டிங் பயிற்சி செய்வதற்கு முன்பு, தீவிரமான கேட்ச்சிங் பயிற்சியிலும் அவர் ஈடுபட்டார். மொத்தத்தில், கோலியின் ஆட்டம், ஆஸ்திரேலியத் தொடருக்கு அவர் முழுமையாகத் தயாராகிவிட்டார் என்பதைப் பறைசாற்றியது.

மறுமுனையில், 'ஹிட்மேன்' ரோஹித் சர்மா, தொடக்கத்தில் சற்று தடுமாறினார். தனது நீண்ட கால சக வீரரான கோலியைப் போல, அவரால் உடனடியாக ரிதத்தைக் கண்டறிய முடியவில்லை. அவரது கால் நகர்வுகளிலும் (Footwork), டைமிங்கிலும் சில தடுமாற்றங்கள் தெரிந்தன.
ஆனால், விடாமுயற்சியுடன் கோலியை விட அதிக நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட ரோஹித், நேரம் செல்லச் செல்ல தனது இயல்பான ஆட்டத்திற்குத் திரும்பினார். சில பந்துகளை தனது வழக்கமான பாணியில் வலைகளுக்குள் சிதறடித்தார். குறிப்பாக, பெர்த் மைதானத்தின் பவுன்ஸை மனதில் கொண்டு, தனது ஃபார்வர்டு டிஃபென்ஸ் ஷாட்களை அவர் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்தார்.
இந்த வலைப்பயிற்சியைக் காண, பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் ஏராளமான இந்திய ரசிகர்கள் கூடியிருந்தனர். பயிற்சியை முடித்துவிட்டு வெளியே வந்த கோலியும், ரோஹித்தும் ரசிகர்களை ஏமாற்றவில்லை. ரசிகர்களின் அன்பில் மூழ்கிய இருவரும், அவர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டும், அவர்களுடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.
இதுவே தங்களது கடைசி ஆஸ்திரேலிய பயணமாக இருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், இருவரும் மிகவும் நிதானமான மற்றும் மகிழ்ச்சியான மனநிலையில் காணப்பட்டனர். இருவரும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ரன் குவிப்பார்களா? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.