பெர்த்: இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை பின்பற்றாமல் எனது ஸ்டைலில் கேப்டன் பொறுப்பை மேற்கொள்வேன் என்று ஜஸ்பிரிட் பும்ரா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் கேப்டன்சியை மேற்கொள்வது குறித்து ரோஹித் சர்மாவுடன் இந்தியாவில் இருந்த போதே ஆலோசித்ததாகவும் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கபில் தேவ்-க்கு பின் முதல்முறையாக வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் கேப்டனாக கொண்டு வரப்பட்டிருக்கிறார். ஏனென்றால் இந்திய அணி வரலாற்றில் பேட்ஸ்மேன்களே அதிகளவில் கேப்டன்களாக இருந்து வந்துள்ளனர். கபில் தேவ், அனில் கும்ப்ளே மட்டும் விதிவிலக்காக இருந்து வந்த நிலையில், இப்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் பவுலர்களை கேப்டனாக வேண்டும் என்ற குரல் ஒலித்து வருகிறது.

ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் செயல்பட்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு வரை நியூசிலாந்து அணியின் கேப்டனாக டிம் சவுதி செயல்பட்டு வந்தார். தற்போது இந்திய அணியிலும் பும்ரா கேப்டனாக கொண்டு வரப்பட்டுள்ளதால், மாற்றங்களை வரத் தொடங்கியுள்ளதாக ரசிகர்களிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்பட்டிருக்கிறார். ஆனால் இம்முறை அடுத்த கேப்டனுக்கான ரேஸில் முன்னிலை பெறுவதற்கான வாய்ப்பு பும்ராவுக்கு கிடைத்துள்ளது. பெர்த் டெஸ்டில் வெற்றியை ஈட்டுவதன் மூலமாக அடுத்த கேப்டனாக நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
இந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை அறிமுகம் செய்த பின், இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பும்ரா பேசுகையில், பார்டர் கவாஸ்கர் கோப்பைக்காக இந்திய அணி வீரர்கள் சிறப்பாக தயாராகி இருக்கின்றனர். 10 நாட்களுக்கு முன்பாகவே ஆஸ்திரேலியா வந்து தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். கடந்த 2 முறையும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது.
இம்முறை அந்த பொறுப்பு இந்திய இளம் வீரர்களின் கைகளில் தான் உள்ளது. அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய அணியின் வழிநடத்துவது மிகப்பெரிய பெருமையாக நினைக்கிறேன். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு எப்படி வித்தியாசமான ஸ்டைல் இருந்ததோ, அதேபோல் எனக்கும் வேறு ஸ்டைல் இருக்கிறது. அதன்படி களத்தில் இந்திய அணி வழிநடத்துவேன்.
கேப்டனாகிவிட்டதால் உயர்ந்தவர் என்பது கிடையாது. இதனை ஒரு பொறுப்பாக மட்டுமே பார்க்கிறேன். எப்போதும் பொறுப்பை எடுத்து கொண்டு செயல்படுவது பிடித்தமானது. அதனால் எந்த அழுத்தமும் இல்லை. இங்கு வருவதற்கு முன்பாகவே கேப்டன்சி குறித்து ரோஹித் சர்மாவுடன் பேசினேன். ஆனால் ஆஸ்திரேலியா வந்த பின் தான், இந்திய அணியை வழிநடத்துகிறேனா என்பது குறித்து தெளிவு கிடைத்தது.
இந்திய அணியின் பிளேயிங் லெவனை ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். நாளை பெர்த் மைதானத்தில் டாஸ் போடப்பட்ட பின், அனைவருக்கும் யார் யார் களமிறங்குகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதேபோல் நீண்ட நாட்களாகவே வேகப்பந்துவீச்சாளர்களும் கேப்டனாக செயல்படலாம் என்று பேசி வந்திருக்கிறேன். ஏனென்றால் திட்டங்களை செயல்படுத்துவதில் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறந்தவர்கள் என்று நினைக்கிறேன்.
ஆஸ்திரேலியா அணிக்காக பேட் கம்மின்ஸ் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதற்கு முன்பாகவும் வேகப்பந்துவீச்சாளர்கள் கேப்டன்களாக ஏராளமான வெற்றிகளை பெற்றுள்ளார்கள். இந்தியாவிலேயே கபில் தேவ் இருந்திருக்கிறார். தற்போது அந்த பாரம்பரியம் மீண்டும் வந்திருப்பதாக நினைக்கிறேன். கடந்த 2 முறையும் ஆஸ்திரேலியா மண்ணில் வென்றிருப்பதால், எந்த அழுத்தமும் எங்களுக்கு கிடையாது.
வெற்றியோ, தோல்வியோ.. விளையாட்டின் அழகே ஒவ்வொரு முறையும் ஜீரோவில் இருந்து தொடங்க வேண்டும் என்பது தான். அதனால் நாங்கள் எந்த வெற்றியையும் தலையில் சுமந்து கொண்டு வரவில்லை. மேலும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி எப்போதும் ஒரு அங்கமாக இருந்து வந்துள்ளார். இந்திய அணி நிர்வாகம் அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறது. எல்லாம் சரியாக சென்றால், ஆஸ்திரேலியா மண்ணிலும் அவர் விளையாட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.