மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சொதப்பியதற்கு அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மா,14 பந்துகளை எதிர் கொண்டு 8 ரன்கள் சேர்த்த நிலையில் கோலி டக் அவுட் ஆனார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் டெல்லியில் விளையாடிவிட்டு உடனடியாக ஆஸ்திரேலியாவில் சென்று விளையாடுங்கள் என சொல்வது கொஞ்சம் கடினமான விஷயம் தான்.

அதுவும் விராட் கோலி,ரோஹித் சர்மா தொடர்பாக நாம் எந்த ஒரு குறையும் சொல்ல முடியாது. பேட்டிங்கில் முதல் ஒருநாள் போட்டியில் அவர்கள் கொஞ்சம் தடுமாறினார்கள். அது மட்டும் இல்லாமல் மழை அடிக்கடி பெய்ததும், நமது வலியை அதிகப்படுத்தியது ஒரு நேரம் விளையாடுவதும் அடுத்த நொடி மைதானத்தை விட்டு வெளியே செல்வதும் என பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் தடுமாறினார்கள்.
இப்படி விளையாடும் போது அது கடினமாக தான் இருக்கும். ஆனால் முதல் 10 ஓவரிலேயே இந்திய அணி போட்டியில் தோல்வியை தழுவி விட்டது என்று நினைக்கின்றேன். அதற்கு மார்ஷ் கேப்டன்சியை பாராட்ட வேண்டும். ஆனால் பேப்பர் அளவில் இந்தியா தான் சிறந்த அணி. என்னுடைய இந்த கருத்தில் நான் தெளிவாக இருக்கின்றேன். ஆனால் நமது யுத்திகள் தான் தவறாக முடிந்துவிட்டது.
வீரர்களை தேர்வு விதமும் பேட்டிங் வரிசையும் தவறாக இருந்தது. ஒட்டுமொத்த திட்டங்களும் இந்த போட்டியில் தவறாக முடிந்தது. ஒரு போட்டியை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதிலும் தவறு நடந்திருக்கிறது. மழை பெய்ததோ இல்லையோ அதையெல்லாம் மறந்து விடுங்கள். நமது யுத்திகள் நன்றாக இருந்தால் மட்டுமே நம்மால் சிறப்பாக விளையாட முடியும்.
ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதில் மறுப்பதற்கு இல்லை. ஆனால் களத்தில் தவறான யுத்திகள் மற்றும் காம்பினேஷனில் தவறு நடந்தால் நிச்சயம் நம்மால் வெற்றி பெற முடியாது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் நம்மால் கம்பேக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை வெறும் ஒரு இன்னிங்ஸ் வைத்து மதிப்பிட முடியாது.
வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். அவர்கள் விராட் கோலிக்கு இதுபோன்ற நெருக்கடியான சூழல் மிகவும் பிடிக்கும். அப்போதுதான் அவர் கம்பேக் கொடுத்து தன்னுடைய திறனை நிரூபிக்க முடியும். இதை அவர் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு சிறப்பாக செயல்படுவார். ரோகித் சர்மாவும் அதே போல் தான் தற்போது கேப்டன் பதவி இல்லாததால் சுதந்திரமாக விளையாடுவார். வீரர்கள் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. யுக்திகள் மற்றும் காம்பினேஷன்தான் எனக்கு கவலை இருக்கின்றது என ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.