சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சிறப்பாக செயல்படவில்லை என்றால், நிச்சயம் ஓய்வை அறிவிப்பார்கள் என்று முன்னாள் கேப்டன் மைக்கில் கிளார்க் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் அக்னி பரீட்சையாக அமைந்துள்ளது.

ஏனென்றால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா 6 இன்னிங்ஸில் 92 ரன்களும், விராட் கோலி 6 இன்னிங்ஸில் 93 ரன்களும் மட்டுமே சேர்த்தனர். இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கில் கிளார்க் பேசுகையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பாக விளையாடவில்லை என்றால், இதுதான் அவர்களின் கடைசி தொடர்பாக இருக்கும்.
ஒருவேளை ஓய்வை அறிவிக்கவில்லை என்றால், அவர்கள் இருவரும் இந்திய அணியில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் சந்திக்கும் விஷயம் தான் இது. ஒரு பேட்ஸ்மேன் ரன்கள் எடுக்கவில்லை என்றாலோ, ஒரு பவுலர் விக்கெட் எடுக்கவில்லை என்றாலோ, அவர்களை சுற்றி இந்த பேச்சுகள் தொடங்கிவிடும்.
இந்த டெஸ்ட் தொடரில் அவர்கள் இருவரும் நிச்சயம் கம்பேக் கொடுத்து அதிக ரன்கள் விளாசுவார்கள் என்று நம்புகிறேன். ஆனால் இது டெஸ்ட் கிரிக்கெட். ஆஸ்திரேலியா அணியின் பவுலிங் அட்டாக் மிகவும் வலுவாக உள்ளது. அதற்கேற்ப இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் பலமாக அமைந்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியா பவுலர்களுக்கும், இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் இடையிலான தொடராக இருக்கும் என்று கூறியுள்ளார்.
அதேபோல் ரோஹித் சர்மாவுக்கு 38 வயது எட்ட உள்ளதால், இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விராட் கோலிக்கு 36 வயதாகுவதால், இன்னும் 2 ஆண்டுகள் வரை அவரால் தீவிர கிரிக்கெட்டை விளையாட முடியும் என்று பார்க்கப்படுகிறது.