பெர்த்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஐபிஎல் தொடருக்கு பிறகு தற்போது கிரிக்கெட் களத்திற்கு திரும்புகின்றனர். இருவரும் கடைசியாக மார்ச் ஒன்பதாம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினர்.
இந்த நிலையில் இளம் வீரர்களை நோக்கி அணி நகர்வதால் சீனியர் வீரர்களான இருவரும் அணியில் தொடர வேண்டுமா என்று கேள்வி எழுந்துள்ளது. எனவே ஆஸ்திரேலியா தொடர், விராட் கோலி, ரோகித் சர்மா என இருவருக்கும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ஆன ராஜ்குமார் சர்மா, விராட் கோலியும், ரோகித் சர்மாவும் யாருக்கும் எதையும் நிரூபிக்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், விராட் கோலி இந்திய அணிக்காக பல சாதனைகளை செய்திருக்கிறார்.
அவர் நாட்டுக்காக பல போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார். இந்திய அணியில் வெற்றிக்கு அவருடைய பங்களிப்பு என்ன என்று பலருக்கும் தெரியும். அவர் புதிதாக எதையும் நிரூபிக்க தேவையில்லை. இந்த தொடருக்காக விராட் கோலி நல்ல முறையில் தயாராகி வருகிறார்அவர் எப்போதெல்லாம் நல்ல முறையில் தயாராகிறாரோ அப்போதெல்லாம் நல்ல முடிவுகள் கிடைத்திருக்கின்றது.
அவருடைய திறமை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அவர் எப்போதும் போல் சிறப்பாக விளையாடுவார். நான் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன். விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் மிகச் சிறந்த வீரர்கள். ஒட்டு மொத்த இந்திய கிரிக்கெட்டுமே அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டிருக்கிறது.
எனவே இன்னும் சாதிக்க நிரூபிக்க எதுவும் இல்லை. இந்த கட்டத்தில் அவர்கள் தங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்று யாராவது எண்ணினால் அது உண்மையிலேயே நகைச்சுவையான விஷயம் என்று ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.