சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த விராட் கோலி மீண்டும் அதே தவறு செய்து ஆட்டம் இழந்திருப்பது ரசிகர்களை வேதனை அடைய செய்திருக்கிறது.
5 போட்டிகள் கொண்ட இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது என்ற நிலையில், ஐந்தாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஃபார்மில் இல்லாத ரோகித் சர்மாவை கம்பீர் அதிரடியாக நீக்கி இருக்கிறார். இதன் மூலம் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ராகுல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இதனால் கோலி மீது அனைத்து பொறுப்பும் வந்து விழுந்தது. இந்த டெஸ்டில் விராட் கோலி சதம் அடித்தால் மட்டுமே இந்திய அணி ஒரு அளவுக்கு தோல்வியிலிருந்து தப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதற்கு தகுந்தார் போல் விராட் கோலியும் தன்னுடைய பேட்டிங் ஸ்டைலை கொஞ்சம் மாற்றி இருந்தார்.
தொடர்ந்து ஆப்சைடு சென்ற பந்தை அடித்து ஆட்டம் இழந்து விராட் கோலி, இம்முறை அதற்கு ஏற்றார் போல் தனது ஸ்டாண்டிங்கை மாற்றினார். இந்த டெஸ்ட் தொடரில் தனது இடது காலை கொஞ்சம் அகன்று ஓப்பன் ஸ்டாண்டில் இருந்த விராட் கோலி, இன்று ஸ்டாண்டிங்கை மாற்றி லெக் ஸ்டம்ப் முன் நின்றார். இதனால், ஆப் ஸ்டம்ப்க்கு வெளியே சென்ற பந்தை விடுவதற்கு ஏதுவாக இருந்தது.
இதன் காரணமாக கோலி இன்று 69 பந்துகளை எதிர் கொண்டு 17 ரன்கள் சேர்த்தார்.கோலி ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. எனினும் விராட் கோலி நேரம் செல்ல செல்ல மீண்டும் பழைய ஸ்டாண்டிங்கில் வந்து நின்றார். இதன் காரணமாக போலந்து ஆப் ஸ்டம்ப்க்கு வெளியே வீசிய பந்தை அடித்து ஆட முற்பட்டு விராட் கோலி கேட்ச் ஆனார். இதனால் இந்திய அணி 72 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இருவரும் நீக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.