மெல்போர்ன்: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை விடவும் நட்சத்திர வீரரான விராட் கோலி தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். விராட் கோலி ஒரே மாதிரியான பந்துகளுக்கு ஆட்டமிழப்பது ஆச்சரியமளிப்பதாக கூறிய அவர், பேட்டிங் பயிற்சியாளர் என்ன செய்கிறார் என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்துள்ள தோல்வி ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் மத்தியிலும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 2 சீனியர் வீரர்களின் எதிர்காலம் குறித்த பேச்சுகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஏனென்றால் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த 2 ஆண்டுகளாக 31 பேட்டிங் சராசரியுடன் விளையாடி வருகிறார்.

அதேபோல் விராட் கோலி கடந்த 4 ஆண்டுகளாக 31 என்ற பேட்டிங் சராசரியுடன் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். இவர்கள் இருவரும் இந்திய அணிக்காக விளையாடி வருவதால், சுப்மன் கில், சர்ஃபராஸ் கான், துருவ் ஜுரெல், ருதுராஜ் கெய்க்வாட், அபிமன்யூ ஈஸ்வரன் போன்ற இளம் வீரர்கள் பலரும் பெஞ்சில் அமர வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு பின் டெஸ்ட் அணியில் இருந்து இருவரையும் நீக்க வேண்டும் அல்லது தேர்வுக் குழுவினர் அவர்களுடன் பேசி ஓய்வு பெற வைக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து முன்னாள் வீரரும், மும்பை வீரர்களின் அபிமானியுமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், ரோஹித் சர்மாவுக்கு வயதாகிவிட்டது.
ஆனால் விராட் கோலியை பொறுத்தவரை இன்னும் சில ஆண்டுகள் விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான தகுதி விராட் கோலியிடம் இருக்கிறது. மகத்தான டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் விராட் கோலியும் ஒருவர். அவர் களத்தில் விளையாடும் போது சிறப்பாக ஆடுவது கண்கூடாக தெரிகிறது. ஆனால் ஒரே மாதிரி பந்துகளுக்கு மீண்டும் மீண்டும் ஆட்டமிழப்பது தான் ஆச்சரியத்தை கொடுக்கிறது.
இவற்றை அறிந்தும் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் என்ன செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். விராட் கோலி குறித்து ஏராளமான விஷயங்களை தொடர்ந்து விவாதிக்கிறோம். இனி அவரை சில நாட்கள் தனித்துவிட வேண்டும் என்று கருதுகிறேன். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒப்பிடவே கூடாது. ஏனென்றால் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர். ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டை நன்றாக விளையாடியவர்.
இதன் காரணமாகவே விராட் கோலியை ஆதரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் ரவி சாஸ்திரி பேசுகையில், விராட் கோலி இன்னும் 3 முதல் 4 ஆண்டுகள் வரை விளையாடுவார் என்று நினைக்கிறேன். ஆனால் ரோஹித் சர்மாவுக்கு இதுதான் முடிவு செய்ய வேண்டிய நேரம். ஏனென்றால் டாப் ஆர்டரில் விளையாடி வருகிறார். அவர்களின் கால்கள் நகர்த்துவது மாறியுள்ளது. கொஞ்சம் தாமதமாக ஷாட்களுக்கு செல்கிறார். அதனால் இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின் ஓய்வை அறிவிப்பது அவரின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.