சிட்னி: இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி எமோஷனலான வீரர் என்று ஆஸ்திரேலியா ஜாம்பவான் கிளென் மெக்ராத் விமர்சித்துள்ளார். அவர் மீது மிகப்பெரிய அழுத்தம் இருப்பதாக கூறியுள்ள அவர், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் முதல் பாதியில் குறைந்த ஸ்கோர்களை எடுத்தால், விராட் கோலியாலும் அழுத்தத்தை உணர முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளின் வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணியின் விராட் கோலிக்கு வாழ்வா சாவா தொடராக அமைந்துள்ளது. ஏனென்றால் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் 93 ரன்களை மட்டுமே சேர்த்தார்.

அதற்கு முன்பாக வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பெரியளவில் சோபிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் கடந்த 5 ஆண்டுகளில் விராட் கோலி 2 டெஸ்ட் சதங்களை மட்டுமே விளாசி இருக்கிறார். இதனால் விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் விராட் கோலி மீதான அழுத்தம் உச்சத்தில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து ஆஸ்திரேலியா ஜாம்பவான் கிளென் மெக்ராத் பேசுகையில், எனக்கு தெரிந்தவரை விராட் கோலி கொஞ்சம் அழுத்தத்தில் இருக்கிறார். ஒருவேளை ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் முதல் 2 இன்னிங்ஸ்களில் குறைந்த ஸ்கோரை எடுத்தால், நிச்சயம் அதனை விராட் கோலியும் உணர்வார் என்று நினைக்கிறேன்.
ஆனால் விராட் கோலியை மனதளவில் உடைக்க முடிவு செய்து அவர் மீது அதிகமாக விமர்சனங்களை வைத்தால், களத்தில் அவருடன் வாக்குவாதத்திலோ அல்லது மோதலிலோ ஈடுபட்டால், அவரால் ரன்கள் குவிக்க வாய்ப்புகள் உள்ளது. என்னை பொறுத்தவரை விராட் கோலி ஒரு உணர்ச்சிப்பூர்வமான கிரிக்கெட் வீரர். சிறப்பாக விளையாடும் போது உச்சத்தில் இருப்பார்.
அதேபோல் மோசமான ஃபார்மில் இருந்தால், எதிர்பார்ப்பதை விடவும் மோசமாக ஆடுவார். நியூசிலாந்து டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த பின் இந்திய அணிக்கு மிகப்பெரிய அழுத்தம் இருப்பது குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம். அதனால் தொடக்கம் முதலே போதுமான திட்டங்களுடன் இந்திய அணியை பலவீனமடைய செய்தால், ஆஸ்திரேலியா அணியால் எளிதாக தொடரை கைப்பற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.