மெல்போர்ன்: இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியின் கிங் என்ற பட்டத்தை பும்ரா கைப்பற்றிவிட்டதாக ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் சைமன் கேடிச் விமர்சித்துள்ளார். விராட் கோலி பரிதாபமாக காணப்படுவதாக கூறிய அவர், கிங் கோலியின் ஃபார்ம் காரணமாக ஆஸ்திரேலியா வீரர்கள் மகிழ்ச்சியில் இருப்பதாக கூறியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சொந்த மண்ணில் ஸ்பின்னர்களிடமும், ஆஸ்திரேலியா மண்ணில் வேகப்பந்துவீச்சாளர்களிடமும் திணறி வருகிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 7 இன்னிங்ஸில் ஒரு சதம் உட்பட 167 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். பாக்ஸிங் டே டெஸ்டின் மிக முக்கியமான நேரத்தில் கூட விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதுமட்டுமல்லாமல் மீண்டும் மீண்டும் அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் லைனில் விராட் கோலி ஆட்டமிழப்பது தொடர்கதையாகி வருகிறது. அவர் போல்ட் அல்லது எல்பிடபிள்யூ முறையில் கூட ஆட்டமிழப்பதில்லை. அதேபோல் விராட் கோலி களமிறங்கினாலே அத்தனை பவுலர்களும் எந்தவித தயக்கமும் இன்றி அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் லைனிலேயே பவுலிங் செய்து வருகின்றனர்.
இவரும் சொல்லி வைத்தது போல் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் நோக்கி நடக்கிறார். இதனால் விராட் கோலி ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று இந்திய ரசிகர்களே பேச தொடங்கிவிட்டனர். இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் சைமன் கேடிச் பேசுகையில், இந்திய கிரிக்கெட் கிங் இறந்து வெகு நாட்களாகிவிட்டது. அவர் ரன்கள் சேர்க்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.
தற்போது விராட் கோலியின் கிங் பட்டம் பும்ராவிடம் உள்ளது. பும்ரா தான் இப்போது போர்க்களத்தில் இருப்பது தாக்குதலை நடத்தி வருகிறார். விராட் கோலியை பார்ப்பதற்கே பரிதாபமாக உள்ளது. இன்றைய நாளில் மிகப்பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய சூழலில் களமிறங்கிய விராட் கோலி, வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறுகிறார்.
அதுபோன்ற நேரத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 31 ரன்களாக மட்டுமே இருக்கிறது. ஒரு காலத்தில் 50 சராசரியுடன் விளையாடி வந்த விராட் கோலி, இப்போது 20 ரன்களை கூட கன்சிஸ்டன்சியாக சேர்ப்பதில்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.