மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கோன்ஸ்டாஸ்-ஐ, இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி சீண்டினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் கோலியை கிண்டல் செய்யும் வகையில் ஒரு விஷயத்தை செய்தனர்.
சாம் கோன்ஸ்டாஸ்-இன் விக்கிபீடியா பக்கத்தில் விராட் கோலி பற்றி குறிப்பிட்டு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ரசிகர்களுக்கு இடையேயான மோதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று இருக்கின்றனர். கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் இருக்கும் பரபரப்பை விட சமீப காலங்களில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான போட்டிகளில் தான் பரபரப்பு உச்சத்தை எட்டுகிறது.

இரு அணி வீரர்களும் மோதலிலும், சீண்டலிலும் ஈடுபடுவதால் எப்போதும் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிகளின் போது பரபரப்பு நிலவி வருகிறது. அதே போல, தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரிலும் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
முன்னதாக முகமது சிராஜ் மற்றும் ட்ராவிஸ் ஹெட்-டுக்கு இடையேயான மோதல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. தற்போது நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அறிமுக வீரர் சாம் கோன்ஸ்டாஸ் மற்றும் உலகின் முன்னணி பேட்ஸ்மேனான விராட் கோலி இடையேயான சீண்டல் சம்பவம் ஆஸ்திரேலிய ரசிகர்களை பெரும் அளவில் கோபப்பட வைத்தது.
இந்தப் போட்டியில் அறிமுகம் ஆன சாம் கோன்ஸ்டாஸ் சிறந்த வேகப் பந்துவீச்சாளரான பும்ரா ஓவர்களில் அதிரடியாக ரன் குவித்தார். அதனால், இந்திய அணி அதிர்ச்சியில் இருந்தது. சாம் கோன்ஸ்டாஸ் அறிமுகப் போட்டியில் ஆடுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் தன்னம்பிக்கையுடன் காணப்பட்டார்.
இந்த நிலையில், 10வது ஓவரின் முடிவில் விராட் கோலி சாம் கோன்ஸ்டாஸ்-ஐ இடித்தார். விராட் கோலி வேண்டும் என்றே சாம் கோன்ஸ்டாஸ் அருகே சென்று தனது தோள்களால் அவரை இடித்தார். அது தேவையற்றது என இந்திய ரசிகர்கள் கூட கூறி வந்தனர்.
விராட் கோலி தனது கவனத்தை சிதற வைக்க முயன்ற போதும் சாம் கோன்ஸ்டாஸ் 52 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து அசத்தினார். பின்னர் 65 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனிடையே சில வில்லங்கமான ஆஸ்திரேலிய ரசிகர்கள் சாம் கோன்ஸ்டாஸ்-இன் விக்கிபீடியா பக்கத்தில் "விராட் கோலியின் தந்தை சாம் கோன்ஸ்டாஸ்" என ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தனர். அந்த புகைப்படத்தையும் எடுத்து இந்திய ரசிகர்களுக்கு அனுப்பி பதிலடி கொடுத்தனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.