மெல்போர்ன்: ஒயிட் பால் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு விராட் கோலிக்கு அமைந்துள்ளது. டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இணைத்து சச்சின் டெண்டுல்கர் 18,436 ரன்களை சேர்த்துள்ள நிலையில், விராட் கோலி 18,369 ரன்களை விளாசி இருக்கிறார்.
சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து நட்சத்திர வீரர் விராட் கோலி ஓய்வை அறிவித்துவிட்டார். இதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விராட் கோலி கவனம் செலுத்தி வருகிறார். 2027 உலகக்கோப்பையை மனதில் வைத்து விராட் கோலி தயாராக வருகிறார். அதற்கான முதல் படியாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் அமைந்துள்ளது.

ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆடிய விராட் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளார். இந்த நிலையில் நாளை அடிலெய்டு மைதானத்தில் 2வது ஒருநாள் போட்டி நடக்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். விராட் கோலி 45 நிமிடங்கள் தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.
குறிப்பாக ஜோஷ் ஹேசல்வுட் பவுலிங்கை எதிர்கொள்ள விராட் கோலி தயாராகி வருகிறார். இந்த நிலையில் விராட் கோலி 2வது ஒருநாள் போட்டியில் 68 ரன்கள் சேர்த்தால், மிகப்பெரிய உலக சாதனையை படைக்க முடியும். ஒயிட் பால் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 464 போட்டிகளில் விளையாடி 18,436 ரன்களை விளாசி இருக்கிறார்.
அதேபோல் விராட் கோலி 428 போட்டிகளில் விளையாடி 18,369 ரன்களை விளாசி இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 303 போட்டிகளில் விளையாடி 14,181 ரன்களையும், டி20 கிரிக்கெட்டில் 125 போட்டிகளில் விளையாடி 4,188 ரன்களையும் விளாசி இருக்கிறார். இதனால் நாளைய ஆட்டத்தில் 68 ரன்களை விளாசினால், விராட் கோலி புதிய உலக சாதனையை படைக்க முடியும்.
அதாவது ஒயிட் பால் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற புதிய சாதனையை படைக்க முடியும். அதேபோல் நாளைய ஆட்டத்தில் 25 ரன்களை விராட் கோலி விளாசினால், அடிலேய்டு மைதானத்தில் ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமையையும் பெற முடியும். இதுவரை அடிலெய்டு மைதானத்தில் 17 இன்னிங்ஸில் விளையாடியுள்ள விராட் கோலி, 975 ரன்களை விளாசி இருக்கிறார்.