மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், சீனியர் வீரரான விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட வேண்டும், ரோஹித் சர்மாவை போல் தாமாக முன்வந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலக வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன.
ஏனென்றால் ஆஸ்திரேலியா மண்ணில் 9 இன்னிங்ஸில் ஆடிய விராட் கோலி 190 ரன்களையும், சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸில் 93 ரன்களும் மட்டுமே சேர்த்திருக்கிறார். இதனால் விராட் கோலியின் சிக்கலை அவரால் களைய முடியாது என்றும், அவரது இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 2009ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான விராட் கோலி, ஒரேயொரு ஒருநாள் தொடருடன் கழற்றிவிடப்பட்ட போது அவர் அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. அதில், 2008ல் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். ஆனால் அடுத்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் என் பெயர் இல்லை. அதற்கான காரணமும் புரியவில்லை. ஒருவேளை களத்தில் எனது செயல்பாடுகளை கண்டு முடிவு எடுக்கப்பட்டிருக்கும் என்று சிந்தித்தேன்.
கொஞ்சம் திமிரான பையனாக என்னை சிலர் பார்த்திருப்பார்கள் என்று கருதினேன். அதன்பின் இலங்கை தொடரில் அறிமுகமான நிலையில், மீண்டும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. நான் வீட்டிற்கு கார் ஓட்டிச் சென்ற போது, திடீரென பத்திரிகையாளர் ஒருவர் வந்து அந்த தகவலை கூறினார். உடனடியாக காரினை நிறுத்திவிட்டு, அதிர்ச்சியில் இருந்தேன். என்னால் அந்த முடிவை நம்பவே முடியவில்லை.
அப்போது எனது மனதில் இது மிக முக்கியமான பிரச்சனை என்று முடிவு செய்து கவனம் செலுத்தினேன். பின்னர் 2009ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தேர்வு செய்யப்பட்டேன். இடைப்பட்ட காலத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5 சதங்களை விளாசினேன். அந்த நேரத்தில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும், இப்போது அதனை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
ஏனென்றால் அந்த விஷயம் நடக்கவில்லை என்றால், கவனம் செலுத்தி இருக்க முடியாது. இந்திய அணி என்னை கொஞ்சம் கூட ஓய்வெடுக்கவிடவே இல்லை. அந்த நேரத்தில் தொடர்ச்சியாக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு விளையாடவில்லை என்றால், என் மனநிலை வேறு மாதிரி இருந்திருக்கும். அந்த நேரத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடியது எனது திறமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. உள்ளூர் கிரிக்கெட் மற்றும் இந்தியா ஏ அணிக்காக ஆடிய போட்டிகள் ஒரு பேட்ஸ்மேனாக மனதளவில் மாற்றத்தை கொடுத்தது.
இந்திய அணியில் நான் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும், இன்னொரு பக்கம் பேட்ஸ்மேனாக அடுத்த கட்டத்திற்கு உயர்ந்து கொண்டே இருந்தேன். அதனை நான் கொஞ்சம் கூட அறிந்திருக்கவும் இல்லை. ஏனென்றால் அந்த சூழலில் ரன்கள் அடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருந்தேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் அப்போது போல் மீண்டும் விராட் கோலி உள்ளூர் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசி ஃபார்மை மீட்டெடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.