சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி முதல் ரன்னை எடுத்த போது, சிட்னி மைதானத்தில் இருந்த அத்தனை ரசிகர்கள் மிகப்பெரிய கரகோஷத்தை எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இதனை பார்த்து சிரித்த விராட் கோலி, ரசிகர்களுக்கு நன்றி கூறும் வகையில் தம்ஸ் அப் சிக்னலை காட்டினார்.
ஐபிஎல் தொடருக்கு பின் நீண்ட மாதங்களாக ஓய்வில் இருந்த விராட் கோலி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டார். இதனால் விராட் கோலியின் ஆட்டத்தை ஆஸ்திரேலியா மண்ணில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். அதுமட்டுமல்லாமல் விராட் கோலியின் ஆட்டத்தை ஆஸ்திரேலியா மண்ணில் கடைசியாக பார்க்க விருப்பமா என்று விளம்பரங்கள் பரவின.

ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் டக் அவுட்டாகி விராட் கோலி ஏமாற்றம் அளித்தார். விராட் கோலியின் சொதப்பல் காரணமாக, இந்திய அணி தோல்வி அடைந்ததோடு, ஒருநாள் தொடரையும் பறிகொடுத்தது. இந்த நிலையில் சிட்னி மைதானத்தில் கடைசி ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.
முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 46.4 ஓவர்களுக்கு 236 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் இந்திய அணிக்காக சுப்மன் கில் - ரோகித் சர்மா தொடக்கம் கொடுத்தனர். இதில் சுப்மன் கில் 24 ரன்களில் ஆட்டமிழக்க, சிட்னி மைதானத்தில் மிகப்பெரிய கரகோஷம் எழுந்தது. ஏனென்றால் சிட்னி மைதானத்தில் களத்திற்குள் விராட் கோலி நடந்து வந்தார்.
அப்போது சிட்னி மைதானத்தில் இருந்த அத்தனை ரசிகர்களும், நிர்வாகிகளும் எழுந்து நின்று விராட் கோலிக்கு மரியாதை கொடுத்தனர். இதன்பின் ஹேசல்வுட் பவுலிங்கில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விராட் கோலி முதல் ரன்னை எடுத்தார். அப்போது ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது என்று சொல்லலாம். இதனால் சிரிக்க தொடங்கிய விராட் கோலி, தம்ஸ் அப் சிக்னல் காட்டி நன்றி தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் விராட் கோலி விளையாடும் கடைசி போட்டி என்பதால், அந்நாட்டு ரசிகர்களும் நெகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். விராட் கோலி விக்கெட்டை வீழ்த்த ஹேசல்வுட் மற்றும் ஜாம்பா ஆகியோரை கொண்டு வந்த போதும், ஆஸ்திரேலியா அணிக்கு எந்த பலனும் அளிக்கவில்லை. இதனால் விராட் கோலி பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.