சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸிலும் விராட் கோலி 6 ரன்களில் அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்திற்கு விக்கெட்டை பறிகொடுத்து சென்றுள்ளார். இதனால் விராட் கோலி ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இருந்து தான் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விராட் கோலியின் பேட்டிங் டெக்னிக்கை பார்த்து இங்கிலாந்து ஜாம்பவான்களும் கூட வியந்து பேசினார்கள்.

ஆனால் விராட் கோலி எங்கிருந்து கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக ஆதிக்கம் செலுத்த தொடங்கினாரோ, அதே மண்ணில் நிராயுதபாணியாக நிற்கிறார். எந்த பேட்டிங் டெக்னிக் அவருக்கு வெற்றியை கொடுத்ததோ, அதே பேட்டிங் டெக்னிக் இப்போது அவருக்கு சிக்கலை கொடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டியின் 9 இன்னிங்ஸிலும் விராட் கோலி அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்திற்கு ஆட்டமிழந்திருக்கிறார்.
சிட்னியில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் ஆஸ்திரேலியா அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 42 ரன்களை சேர்த்தது. கேஎல் ராகுல் 13 ரன்களிலும், தொடர்ந்து ஜெய்ஸ்வால் 22 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பின் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி களம் புகுந்தார்.
ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலிக்கு இதுதான் கடைசி இன்னிங்ஸாக இருக்கும் என்று பார்க்கப்பட்டது. இதனால் இந்திய அணியை மீட்டெடுத்து அசத்தலான ஒரு இன்னிங்ஸை ஆடுவார் என்று கருதப்பட்டது. ஆனால் 6 ரன்கள் எடுத்திருந்த போது, ஸ்காட் போலண்ட் வீசிய அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் லைன் பந்திற்கு விராட் கோலி விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் போலண்ட் பந்தில் விராட் கோலி 5வது முறையாக விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட முதல் இன்னிங்ஸின் முதல் பந்தில் எப்படி ஸ்டீவ் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து மிஸ்ஸாகியதோ, அதனை இம்முறை ஆக்ஷன் ரீப்ளே காட்டினார். ஆனால் இம்முறை ஸ்டீவ் ஸ்மித் கேட்சை மிஸ் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து விராட் கோலி புலம்பி கொண்டே பெவிலியன் நோக்கி நடந்து சென்றார். இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி மொத்தமாக 9 இன்னிங்ஸில் 190 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார்.
இதன்பின் இந்திய அணி அடுத்த டெஸ்ட் தொடரில் விளையாட 5 மாதங்கள் இருப்பதால், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளது. ஏனென்றால் விராட் கோலி தனது டெக்னிக்கல் சிக்கலில் இருந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கையை ரசிகர்களும் இழந்துவிட்டனர். அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பந்துகளை சந்திப்பதில் சிக்கல் இருக்கும் போதும் கூட, விராட் கோலி மீண்டும் மீண்டும் மிடில் மற்றும் ஆஃப் ஸ்டம்ப் கார்டு எடுத்து விளையாடுவதற்கு பின் இருக்கும் காரணமும் என்ன என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.