சிட்னி: 2014-15 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விராட் கோலி எங்களுக்கு நிகராக சண்டைக்கும் மோதலுக்கும் தயாராக இருந்தது ஆச்சரியம் அளித்ததாக ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மிட்சல் ஜான்சன் தெரிவித்துள்ளார். அதேபோல் அதுநாள் வரை ஆஸ்திரேலியா வீரர்கள் தான் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டு வந்ததாக கூறிய அவர், திடீரென எதிரணி வீரர்களில் இருவர் ஸ்லெட்ஜிங் செய்தது ஆச்சரியமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
2014-15ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்திய அணி ரசிகர்களால் மறக்கவே முடியாது. ஏனென்றால் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தாலும், புதிய கேப்டனை அடையாளம் கண்டு கொண்டது. அந்த டெஸ்ட் தொடர் நடக்கும் போது தான் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக தெரிவித்தார். இதன்பின் இந்திய அணி விராட் கோலி தலைமையில் களமிறங்கியது.

அதுமட்டுமல்லாமல் அந்த டெஸ்ட் தொடரில் மட்டும் விராட் கோலி 692 ரன்களை விளாசி ஆஸ்திரேலியா மண்ணில் அந்நாட்டு ரசிகர்களை மிரள வைத்தார். விராட் கோலியின் எழுச்சி அங்கிருந்து தான் தொடங்கியதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டையே தனது ஸ்விங்காலும், வேகத்தாலும் உலுக்கிய மிட்சல் ஜான்சனை விராட் கோலி எதிர்கொண்ட விதம் இதுநாள் வரை பேசப்பட்டு கொண்டே இருக்கிறது.
இதுகுறித்து மிட்சல் ஜான்சன் பேசுகையில், சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி எங்களுக்கு நிகராக எங்கள் மண்ணில் வீரர்களை எதிர்த்து நின்றது அனைத்து வகையான சம்பவங்களுக்கும் மேலானது. அவர் சண்டைக்கும், ஸ்லெட்ஜிங்கிற்கும் தயாராக இருந்தார். இந்திய வீரர்களில் இப்படியொரு மனநிலை கொண்ட வீரரை பார்ப்பதே அரிதான விஷயம். ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணி மட்டுமே எப்போதும் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடும்.
அதுவரை எதிரணி வீரர்களுக்கு கொடுத்து கொண்டே இருந்த நாங்கள், முதல்முறையாக விராட் கோலியிடம் இருந்து அடி வாங்கி கொண்டே இருந்தோம். அவர் மட்டுமல்லாமல் இந்திய அணியையும் அவருடன் வேகமாக அழைத்து சென்றார். என்னை பொறுத்தவரை விராட் கோலி தான் இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர். புதிய தலைமுறை வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்று காட்டி இருக்கிறார்.
அந்த டெஸ்ட் தொடரில்வ் விராட் கோலியை ரன் அவுட் செய்வதற்காக நான் முயற்சி செய்தேன். ஆனால் அது விராட் கோலிக்கு பிடிக்கவில்லை. அன்றைய நாளின் முடிவில் என்னை பற்றிய சில கருத்துகளை கூறியதும் இன்னும் கோபத்தை அதிகரித்தது. அதன்பின் அடுத்த நாளில் அவரை கொஞ்சம் ஸ்லெட்ஜிங் செய்தோம். அவரும் சில கேட்ச்களை கொடுத்த போது தவறவிட்டுவிட்டோம். அதன்பின் களத்தில் அவரின் எனர்ஜி, ஷாட்ஸ் எல்லாம் அபாரமாக இருந்தது.
சில பந்துகளை வீசிய பின் நானே அது சிறந்த ஷாட் என்று சொல்லிக் கொண்டேன். தற்போது விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் இறங்கிவிட்டது. அவரிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்க கூடாது. ஆனால் ஒரு ரசிகராக விராட் கோலி ஆஸ்திரேலியா மண்ணில் ஒரேயொரு சதத்தை விளாச வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த டெஸ்ட் கிரிக்கெட் நெருப்பு மாதிரி பரபரப்பாக அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.