மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்பது சந்தேகம் என்று தெரிய வந்துள்ள நிலையில், இந்திய அணியை வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே பிசிசிஐ தரப்பில் சில வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. ஆஸ்திரேலியா மண்ணில் முதல்முறையாக இந்திய அணி ஆஷஸ் தொடருக்கு நிகராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதனால் ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் 2 போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்று தெரிய வந்துள்ளது. ஒருவேளை ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாகவே ரோஹித் சர்மா அந்த சிக்கல்களை சரி செய்துவிட்டால், 5 போட்டிகளிலும் விளையாடுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மாவின் இடத்தை பேட்ஸ்மேனாக நிரப்ப முடியும் என்றாலும், கேப்டனாக நிரப்புவது எளிதான விஷயமல்ல. இதனால் ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக யாரை பிசிசிஐ கேப்டனாக நியமிக்கவுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ரோஹித் சர்மா காயமடைந்த போது, தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச டெஸ்ட் தொடரின் போது கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.
அதேபோல் 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா கொரோனா பாதிப்பு காரணமாக விலகியதால், இந்திய அணி ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் களமிறங்கியது. அந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது. இன்னொரு பக்கம் ரிஷப் பண்ட் துணைக் கேப்டனாக சில தொடர்களில் செயல்பட்டிருக்கிறார்.
ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர்கள் மூவரின் தலைமையில் இந்திய அணி பெரியளவில் வெற்றிகளை பெற்றதில்லை. இதனால் பிசிசிஐ நிர்வாகிகள் தரப்பில் விராட் கோலியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகிய பின், விராட் கோலி எந்த அணிக்கும் கேப்டனாக செயல்படவில்லை.
ஆனால் இந்திய டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி 68 போட்டிகளில் விளையாடி 40 வெற்றி, 11 டிரா மற்றும் 17 தோல்வியை பெற்றுள்ளது. சுமார் 59 சதவிகிதம் வெற்றியை விராட் கோலி வைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எந்த கேப்டனுக்கு இப்படியொரு ரெக்கார்ட் இருந்ததில்லை. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா மண்ணில் இருந்து வரும் அழுத்தத்தை விராட் கோலி போன்ற ஒருவரால் எளிதாக சமாளிக்க முடியும்.
ஏற்கனவே இந்திய அணியை வழிநடத்தி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியவர் என்பதால், ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக விராட் கோலியிடம் கேப்டன்சியை ஏற்க பேச்சுவார்த்தை நடத்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.