மும்பை : பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய வரும் 22ஆம் தேதி பெர்த் டெஸ்ட் போட்டியில் எதிர்கொள்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றால் மட்டுமே நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.
இந்த சூழலில் இந்த தொடருக்கு முன்பு நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் கடுமையாக தடுமாறினர். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய வீரர்கள் எவ்வாறு செயல்பட போகிறார்கள் என்ற கவலை ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர், நியூசிலாந்துக்கு எதிராக விராட் கோலி பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. இதனால் ஆஸ்திரேலியா தொடரில் ரன் அடிக்க வேண்டும் என்ற வெறியில் இருப்பார். என்னுடைய நினைவு சரியாக இருந்தால் இந்திய அணி அடிலேய்ட் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களில் ஆட்டம் இழந்தது.
அப்போது கூட விராட் கோலி முதல் இன்னிங்சில் 74 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இதன் மூலம் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். அடிலெய்ட் மைதானம் விராட் கோலிக்கு மிகவும் பிடித்தது. இதே போல் பெர்த் மைதானத்திலும் கடந்த 2018 -19 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பான ஒரு சதத்தை அவர் விளாசி இருக்கிறார்.இதனால் இந்த மைதானங்கள் என்பது விராட் கோலிக்கு ராசியானதாக இருக்கின்றது.
இந்த மைதானங்களில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் விளையாடும்போது அது கூடுதல் நம்பிக்கையை நிச்சயம் கொடுக்கும். ஒவ்வொரு வீரருக்கும் இன்னிங்ஸில் தொடக்கத்தில் கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவைப்படும். அது கிடைத்தால் நிச்சயமாக விராட் கோலி நல்ல தொடக்கத்தை கொடுத்து மிகப்பெரிய ஸ்கோரை குவிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பலவீரர்கள் முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு வந்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள். இது இந்தியாவுக்கு கொஞ்சம் பின்னடைவாக இருக்கிறது. இதனால் விராட் கோலி,ரிஷப் பன்ட் போன்ற வீரர்கள் பெரிய ஸ்கோர் அடித்தால் மட்டுமே ஒரு அளவுக்கு ஆஸ்திரேலியாவை இந்திய அணியால் சமாளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.