ஹோபார்ட்: இந்திய டி20 அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீரும், கேப்டனாக சூர்யகுமார் யாதவும் பொறுப்பேற்ற பிறகு, அணி வெற்றிகளைப் பெற்று வந்தாலும், அவர்களது சில முடிவுகள் அவ்வப்போது விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றன. அந்த வகையில், இன்று ஹோபார்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3வது டி20 போட்டியில், அவர்கள் எடுத்த ஒரு முடிவு பெரும் குழப்பத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
அணியின் முக்கியச் சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர், ஆடும் XI-ல் சேர்க்கப்பட்டும், அவருக்கு ஒரு பந்துகூட வீச வாய்ப்பளிக்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக, பகுதி நேரப் பந்துவீச்சாளர்களான சிவம் துபே மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் ஐந்தாவது பந்துவீச்சாளராகப் பயன்படுத்தப்பட்டு, அதிக ரன்களை விட்டுக் கொடுத்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
தனக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதால் அதிருப்தியில் இருந்த வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் யாரும் எதிர்பார்க்காத ஆட்டத்தை ஆடினார். ஆஸ்திரேலிய பந்துவீச்சை சரமாரியாக வெளுத்த அவர் 23 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் குல்தீப் யாதவிற்குப் பதிலாக இந்தப் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், ஆட்டம் முழுவதும் அவர் பந்துவீச அழைக்கப்படவே இல்லை. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இல்லை என்று கருதினார்களா என்றால், அதுவும் இல்லை.
ஏனெனில், அணியில் இருந்த மற்ற சுழற்பந்து வீச்சாளர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தங்களது 4 ஓவர்களையும் முழுமையாக வீசினர்.வருண் சக்கரவர்த்தி 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இருவரும் ஓவருக்கு 9 ரன்களுக்கும் குறைவாகவே கொடுத்தனர். இது ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஓரளவு ஒத்துழைத்ததையே காட்டுகிறது.
ஐந்தாவது பந்துவீச்சாளருக்கான தேவை ஏற்பட்டபோது, கேப்டன் சூர்யகுமார் யாதவ், சிவம் துபேவை 8வது ஓவரில் பந்துவீச அழைத்தார். அந்த ஓவரில் அவர் 15 ரன்களைக் கொடுத்தார். இருப்பினும், ஆச்சரியப்படும் விதமாக அவருக்கு மேலும் இரண்டு ஓவர்கள் கொடுக்கப்பட்டது. மொத்தமாக 3 ஓவர்கள் வீசிய துபே, 43 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
அவர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததால், மீதமுள்ள ஒரு ஓவரை வாஷிங்டன் சுந்தருக்குக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அபிஷேக் ஷர்மா அழைக்கப்பட்டார். அவரும் தனது ஒரு ஓவரில் 13 ரன்களைக் கொடுத்தார். மொத்தத்தில், துபே மற்றும் அபிஷேக் இருவரும் சேர்ந்து 4 ஓவர்களில் 56 ரன்களை வாரி வழங்கினர்.
ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் வலது கை ஆட்டக்காரர்கள். வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆஃப்-ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தர் பந்துவீசுவது சவாலானது என்ற ஒரு காரணத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால், இந்த விஷயம் அணி நிர்வாகத்திற்கு முன்பே தெரியாதா? ஆஸ்திரேலிய அணியில் வலது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் என்பது தெரிந்தும், சுந்தரை ஏன் அணியில் எடுத்தார்கள்? அவருக்குப் பந்துவீச வாய்ப்பளிக்கப் போவதில்லை என்றால், கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனாக ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாமே? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
IND vs SA Final: உலகக்கோப்பை பைனல் டாஸ் வென்றது யார்? இந்திய அணி எப்போது பேட்டிங்? மழை குறுக்கிடுமா?
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. அடுத்து இந்திய அணி சேஸிங் செய்த போது அதிரடியாக ரன் குவித்தாலும் விக்கெட்கள் வீழ்ந்த வண்ணம் இருந்தது. அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 25, சூர்யகுமார் யாதவ் 11 பந்துகளில் 24 ரன்கள், திலக் வர்மா 26 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து வெளியேறினர். 5 விக்கெட் இழந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக ஆடினார். 23 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். 3 ஃபோர் மற்றும் 4 சிக்ஸ் அடித்தார். அவரது ஆட்டத்தால் இந்திய அணி 18.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது.