மும்பை : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் வெள்ளிக்கிழமை பெர்த் நகரில் தொடங்குகிறது. பெர்த் ஆடுகளும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பெர்த் ஆடுகளத்தில் இயல்பே பந்து பேட்டிற்கு வேகமாக வரும். அது மட்டும் இல்லாமல் மற்ற ஆடுகளத்தை விட பெர்தில் பவுன்ஸ் கொஞ்சம் அதிகமாக இருக்கும். இதனால் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் தடுமாறுவார்கள்.

இந்த சூழலில் இந்திய அணி 4 வேகப் பந்துவீச்சாளர் மற்றும் ஒரு சுழற் பந்துவீச்சாளரை வைத்து முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. குறிப்பாக அதில் 21 வயது வீரரான நித்திஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளது. நிதீஷ் குமார் ரெட்டி தற்போது தான் வளரும் ஆல்ரவுண்டராக இருக்கின்றார்.
அவரை நம்பி 21 வயதில் பெர்த் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு அளிப்பது என்பது தவறான முடிவு என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கூட நிதிஷ்குமார் ரெட்டி அதிகபட்சமாகவே 38 ரன்கள் தான் பேட்டிங்கில் சேர்த்தார். பந்துவீச்சில் 4 இன்னிங்ஸ்களில் மொத்தமாகவே ஒரு விக்கெட்டை தான் வீழ்த்தி இருக்கிறார்.
இதனால் நிதிஷ்குமார் ரெட்டி ஒரு இன்னிங்ஸில் 10 அல்லது 15 ஓவர்கள் வீசினாலே பெரிய விஷயம். இதன் மூலம் மற்ற மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் போட்டியின் போது சிறிது நேரம் ஓய்வு கிடைக்கும். ஆனால் இந்தப் பத்து பதினைந்து ஓவர்களில் நிதிஷ் குமார் ரெட்டி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. ஏனென்றால் அவருடைய வேகம் ஒன்றும் 140 எல்லாம் கிடையாது.
இந்த சூழலில் நிதிஷ் குமார் ரெட்டியை பயன்படுத்துவதற்கு பதில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் இந்திய அணி சேர்க்க வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது. ஆனால் பேட்டிங் செய்யும்போது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இந்தியா இழந்து விட்டால், கீழ் வரிசையில் ஒரு பேட்ஸ்மேன் தேவைப்படுவார். இதனால் இந்திய அணி வாஷிங்டன் சுந்தர் என்ற சுழற் பந்துவீச்சாளரை பயன்படுத்துவது சிறப்பான முடிவாக இருக்கும்.
பெர்தில் பவுன்ஸ் நன்றாக இருக்கும் என்பதால் வாஷிங்டன் சுந்தர் தன்னுடைய உயரத்தை பயன்படுத்தி தனது சுழற்பந்துவீச்சு மூலம் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு நெருக்கடியை கொடுக்க முடியும். அது மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் வாஷிங்டன் சுந்தர் பிரமாதமாக விளையாடுவார். ஏற்கனவே அவர் ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடிய அனுபவம் அவருக்கு கை கொடுக்கும். இதனால் நிதிஷ்குமார் ரெட்டியை சேர்ப்பதற்கு பதில் வாஷிங்டன் சுந்தர் அல்லது வேறு ஒரு வேகப்பந்துவீச்சாளர் சேர்ப்பது தான் சரியான முடிவாக இருக்கும்.