மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. கடைசி நாளில் எளிதாக டிரா செய்யக் கூடிய வாய்ப்பு இருந்தும் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். இதனால் வெறும் 155 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளது.
இதனால் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறும் வாய்ப்பு மோசமாக குறைந்துள்ளது. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், இந்த தோல்வி எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

நிதானமாக விளையாடியதால் டிரா செய்வதற்காக விளையாடினோம் என்பதல்ல. கடைசி வரை தோல்வியை தவிர்க்க போராடினோம். ஆனால் அதனை சரியாக செய்ய முடியவில்லை. கடைசி 2 செஷன்களில் விளையாடுவது கூடுதல் கடினமாக அமைந்தது. இந்த டெஸ்ட் போட்டியை பார்க்கும் போது, நாங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை எங்களால் கைப்பற்ற முடியவில்லை.
ஆஸ்திரேலியா அணியை 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தோம். அதேபோல் சூழல் பிட்ச் கடினமாக மாறும் என்பதை உணர்ந்திருந்தோம். ஆனால் எந்த பிட்ச்-ஆக இருந்தாலும் சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று நினைத்தோம். இந்த தோல்விக்கு ஒரேயொரு காரணம் என்று எதுவும் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை.
எனது அறைக்கு சென்று, ஒரு அணியாக என்ன செய்ய முடியும் என்று முடிவு செய்து அனைத்தையும் முயற்சி செய்தோம். ஆனால் ஆஸ்திரேலியா அணியும் சிறப்பாக போராடியது. அதிலும் கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப் எங்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக நினைக்கிறேன். 340 ரன்கள் என்ற இலக்கு எளிதாக இலக்கு அல்ல என்பதை அறிவேன். ஆனாலும் முதல் செஷனில் சிறப்பாக விளையாடி, கடைசி 2 செஷன்களில் விக்கெட் கைவசம் இருக்க வேண்டும் என்று நினைத்து களமிறங்கினோம்.
ஆனால் அதற்கான அடித்தளத்தை எங்களால் அமைக்க முடியவில்லை. அவர்கள் வெற்றிக்காக முயற்சித்த போது, நாங்கள் வெற்றி பெறுவதற்கான வழியை தேடி கொண்டிருந்தோம். நிதிஷ் குமார் ரெட்டி முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறார். இங்கு பிட்ச் மோசமாக இருந்தும், சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தினார். அவரிடம் நல்ல டெக்னிக்கும் இருக்கிறது. இங்கு சிறப்பாக செயல்படுவதற்கான அத்தனையும் அவரிடம் இருக்கிறது.
அதேபோல் இந்திய அணியின் ஆதரவு அவருக்கு இருக்கும். பும்ராவை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாகவே அவரை பார்த்து வருகிறோம். ஒவ்வொரு முறையும் ஆஸ்திரேலியா வந்து, அவரின் பணியை சிறப்பாக செய்கிறார். ஸ்டாட்ஸை நினைத்து என்றும் அவர் கவலைப்பட்டதில்லை. நாட்டிற்காக சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம். அவருக்கு மற்ற பவுலர்களிடம் இருந்து போதுமான உதவி கிடைகக்வில்லை என்று தெரிவித்துள்ளார்.