மும்பை: இந்திய அணியை இருள் சூழ்ந்த போதெல்லாம் வெளிச்சம் போல் வந்து பும்ரா காப்பாற்றியதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார். இந்திய அணியின் முகமது சிராஜ் அதிகளவில் பவுலிங் செய்து தளர்ந்துவிட்டதாக கூறியுள்ள அவர், வலுவான வேகப்பந்துவீச்சாளர்களை கூட்டணியை பிசிசிஐ நிர்வாகத்தால் கட்டமைக்க முடியவில்லை என்று விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையில், ஒவ்வொரு வீரரின் செயல்பாடுகளும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ் 5 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் பும்ரா போன்ற மிகச்சிறந்த ஃபிட்னஸ் கொண்ட பவுலரும் காயமடைந்த நிலையில், முகமது சிராஜ் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் கொஞ்சம் கூட சளைக்காமல் பவுலிங் செய்து கொண்டே இருந்தார். இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அதிக ஓவர்களை வீசியவரும் சிராஜ் தான். மொத்தமாக 157.1 ஓவர்களை வீசி 20 விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறார்.
இந்த நிலையில் இந்திய அணியின் பவுலிங் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், வேகப்பந்துவீச்சு என்பது ஒரு குழுவாக அமைய வேண்டும். இந்திய அணியால் அப்படியான குழுவை, கூட்டணியை அமைக்க முடியவில்லை. முகமது ஷமி இல்லாத போது, இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே பின்னடைவு தான். முதல் 2 போட்டிகளில் ஹர்சித் ராணாவுடன் இந்திய அணி களமிறங்கியது.
அதன்பின் 3வது போட்டியில் ஆகாஷ் தீப் கொண்டு வரப்பட்டார். அவருக்கு விக்கெட் அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பின்னர் கடைசியாக பிரசித் கிருஷ்ணா கொண்டு வரப்பட்டார். அதேபோல் இந்த டெஸ்ட் தொடரில் முகமது சிராஜ் சோர்வடைந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்திய அணிக்காக அதிக ஓவர்களை சிராஜ் தான் வீசி இருக்கிறார்.
கடந்த ஆண்டிலும் சிராஜ் தான் அதிக ஓவர்களை வீசி இருந்தார். 3 வடிவங்களிலும் மாற்றி மாற்றி பவுலிங் செய்து கொண்டே இருக்கிறார். அவரால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தூரம் சென்று முயற்சிக்கிறார். ஆனால் கடைசியாக சிராஜ் தளர்ந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அதனால் அதிக ரன்களையும் விட்டுக் கொடுத்துள்ளார்.
சிட்னி டெஸ்ட் போட்டியில் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்திய பின், திடீரென களம் விட்டு வெளியேறிய போதும் இந்திய பவுலர்கள் மீண்டும் ஆட்டத்தை இந்திய அணி பக்கம் திருப்பினர். பும்ரா இந்த டெஸ்ட் தொடரில் ஒரு நட்சத்திரமாக ஜொலித்து கொண்டே இருந்தார். எப்போதெல்லாம் இந்திய அணி பக்கம் இருள் சூழ்கிறதோ, அப்போதெல்லாம் வெளிச்சம் போல் விக்கெட்டுகளை வீழ்த்தி கொண்டே இருந்ததாக பாராட்டியுள்ளார்.