மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டின் 2வது நாளில் இந்திய அணியின் பவுலிங் மோசமாக இருந்ததாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார். 2 ஸ்பின்னர்கள் மீதும் நம்பிக்கை இல்லையென்றால், அதற்காக அவர்களை பிளேயிங் லெவனில் சேர்க்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 474 ரன்களை குவித்துள்ளது. முதல் நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா அணி, 2வது நாளின் முதல் செஷனில் மட்டும் 143 ரன்களை விளாசி அதிர்ச்சி அளித்துள்ளது.

இதனால் இந்திய அணியின் பவுலிங் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக முகமது சிராஜ் 23 ஓவர்களில் 122 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. அவரின் எகனாமி ரேட் 5.3ஆக இருப்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்றுக் கொள்ளவே முடியாத விஷயமாகும். அதேபோல் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியும் மோசமாக இருந்தது.
நேற்றைய ஆட்டத்திலேயே ஜடேஜா 20வது ஓவருக்கு முன்பாகவே அட்டாக்கில் கொண்டு வரப்பட்ட நிலையில், வாஷிங்டன் சுந்தர் 52வது ஓவருக்கு பின் பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார். அதேபோல் இன்றைய ஆட்டத்தில் ஜடேஜா விரைவாக அட்டாக்கில் வந்த போது, வாஷிங்டன் சுந்தர் உணவு இடைவேளைக்கு 10 நிமிடங்களுக்கு முன் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார்.
இதுகுறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசுகையில், இந்திய வீரர்களின் பவுலிங் ரொம்ப சுமாராக இருந்தது. எந்த திட்டமும் இல்லாமல் பவுலிங் செய்ய வேண்டிய நிலைக்கு சென்றுவிட்டனர். அதேபோல் பிட்சில் ஸ்பின்னர்களுக்கு உதவி கிடைத்த போது, 2 ஸ்பின்னர்களும் போதுமான அளவிற்கு பயன்படுத்தப்படவில்லை. ஜடேஜா மற்றும் சுந்தர் இருவரும் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டதற்கு இடையில் 40 ஓவர்கள் வீசப்பட்டிருந்தது.
வாஷிங்டன் சுந்தர் முதல் ஓவரை வீசுவதற்கே நீண்ட நேரம் ஆகிவிட்டது. 2 ஸ்பின்னர்களை வைத்து விளையாடும் போது, அவர்கள் மூலமாக சவால் அளிக்க வேண்டும். அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றால், அதற்காக அவர்கள் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுகிறார்கள். 2வது நாளில் ஆஸ்திரேலியா அணி முதல் 45 நிமிடங்களில் விக்கெட் கொடுக்க கூடாது என்பதே திட்டமாக இருந்தது. விரைவாக ஸ்கோரை 350 ரன்களுக்கு எடுத்து செல்வோம் என்று முயற்சித்தனர்.
ஆனால் எதிர்பார்த்ததை விடவும் அவர்களால் விரைவாக ரன்கள் குவிக்க முடிந்ததால், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களின் பணி மிகவும் எளிதாக மாறியது. காபாவை தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் இன்னும் சிறந்த இன்னிங்ஸை மெல்போர்னில் விளையாடி இருக்கிறார். ஒவ்வொரு பவுலருக்கும் ஏற்றபடி கால்களை நகர்த்தியதை பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது என்று பாராட்டியுள்ளார்.