சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் இருவரும் பெஞ்ச் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்த பின், ரோஹித் சர்மாவுடன் நீண்ட நேரம் உரையாடியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
பார்டர் கவாஸ்கர் டிராபியை ரீடெய்ன் செய்யும் நோக்கில் இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பாக தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் இதுவரை பெரிய இன்னிங்ஸை ஆடவில்லை.

அதிலும் ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பதால் மட்டுமே இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து வருகிறார் என்ற விமர்சனங்கள் அதிகரித்தன. இந்த நிலையில் இன்று காலையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்புக்காக கேப்டன் ரோஹித் சர்மா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, ஆச்சரியம் அளிக்கும் வகையில் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நேரடியாக வந்தார்.
ஏனென்றால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போது ஒருமுறை கூட கம்பீர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இதனால் சிட்னி டெஸ்டில் ரோஹித் சர்மா களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கம்பீர், பிட்சை பார்த்த பின் இந்திய அணியின் பிளேயிங் லெவன் நாளை அறிவிக்கப்படும் என்று மட்டுமே பதில் அளித்தார்.
இதன் மூலமாக நாளைய ஆட்டத்தில் கேப்டன் ரோஹித் சர்மா பெஞ்ச் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியானது. அதேபோல் சிட்னி மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, ரோஹித் சர்மா நீண்ட நேரமாக காணவில்லை. இதன்பின் கம்பீருடன் பிட்சை பார்த்த அவர், வாஷிங்டன் சுந்தருடன் நீண்ட நேரமாக உரையாடி கொண்டிருந்தார்.
இதனால் வாஷிங்டன் சுந்தர் நாளைய ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்தது. அதேபோல் செய்தியாளர் சந்திப்புக்கு பின் சுப்மன் கில்லை சந்தித்த கம்பீர், அவருக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் "தம்ப் பிஸ்ட்" ஒன்றை கொடுத்து பேட்டிங் பயிற்சியை தொடங்குமாறு அறிவுறுத்தினார். அப்போது பும்ராவும் சுப்மன் கில்லுக்கு உற்சாகம் அளித்தார்.
அதேபோல் ரோஹித் சர்மா மற்றும் கம்பீர் இருவர் மட்டும் தான் எப்போதும் பிட்சை கண்காணிப்பார்கள். ஆனால் இம்முறை ரோஹித் சர்மா மற்றும் கம்பீர் ஆகியோருடன் பும்ராவும் காணப்பட்டார். இதனால் பும்ரா வசம் கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் நாளைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா, சுந்தர் மற்றும் காயமடைந்த ஆகாஷ் தீப் ஆகிய மூவரும் பெஞ்ச் செய்யப்பட உள்ளது உறுதியாகியுள்ளது.
அவர்களுக்கு பதிலாக சுப்மன் கில், துருவ் ஜுரெல் மற்றும் பிரசித் கிருஷ்ணா அல்லது ஹர்சித் ராணா ஆகியோர் இடம்பெறலாம் என்று தெரிய வந்துள்ளது. இந்திய அணியின் வலைப்பயிற்சியில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்சித் ராணா இருவரும் அதி தீவிரமாக பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால், இருவரும் கூட சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.