சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியதன் மூலமாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவதாக பேச்சுகள் தொடங்கியது. ஆனால் அந்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய ரோஹித் சர்மா 5 இன்னிங்ஸில் வெறும் 31 ரன்களை மட்டுமே சேர்த்தார். இரட்டை இலக்க ரன்களை எடுக்கவே தடுமாறிய அவர், டிஃபென்ஸ் ஆடுவதற்கே திணறியது வெளிப்படையாக தெரிந்தது. இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா பொறுப்பேற்றார்.

இதனால் ரோஹித் சர்மா இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகவே பார்க்கப்பட்டது. அதேபோல் இனி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பில்லை என்பதால், அவர் ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி உள்ளிட்டோரே ரோஹித் சர்மாவுக்கான நேரம் வந்துவிட்டதாக கூறினர்.
இந்த நிலையில் 2வது நாள் ஆட்டத்தின் போது ரோஹித் சர்மா பேசுகையில், மீடியாவில் என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள். வெளியில் லேப்டாப், பேப்பருடன் அமர்ந்து கொண்டு நான் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை சொல்ல கூடாது. மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு பின் புத்தாண்டுக்கு சிட்னிக்கு வந்து சேர்ந்தோம். அன்று என்னால் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழுவிடம் முடிவை கூற முடியாது.
அதேபோல் இந்திய அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயமும் உள்ளது. பிளேயிங் லெவனில் ஃபார்மில் இல்லாத நிறைய வீரர்களை சேர்த்து கொண்டு விளையாட முடியாது. அதனால் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழு என் முடிவுக்கு ஆதரவாக இருந்தனர். தற்போதைய சூழலில் நான் ஓய்வு பெறப் போவதில்லை.
அடுத்த 5 மாதங்களில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் நிகழ் காலத்தில் என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்த விரும்புகிறேன். கிரிக்கெட்டில் இருந்து விலகி வெகு தூரம் செல்லப் போவதில்லை. என் பேட்டில் இருந்து ரன்கள் வராததால், இந்தப் போட்டியில் இருந்து விலகி இருக்கிறேன். அடுத்த 5 மாதங்களிலும் என்னால் ரன்கள் சேர்க்க முடியாது என்று யாராலும் சொல்ல முடியாது.
ஒவ்வொரு நாளும் வாழ்க்கை மாறிக் கொண்டே இருக்கும். என் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார். இந்த பேட்டியின் போது 5 மாதங்கள் என்ற கால அவகாசத்தை ரோஹித் சர்மா கூறியது விவாதமாகியுள்ளது. அடுத்த 5 மாதங்களுக்கு பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது.
ஒருவேளை இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி தோல்வியடைந்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியால் முன்னேற முடியும். இதனால் ரோஹித் சர்மா போன்ற கேப்டன் மற்றும் ஜாம்பவான் வீரரை உடனடியாக வெளியில் அனுப்ப பிசிசிஐ விரும்பவில்லை.
அதுமட்டுமல்லாமல் அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கவுள்ளது. அதில் ரோஹித் சர்மா தனது தலைமை நிரூபிக்கும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் விளையாட ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். அதேபோல் ரோஹித் சர்மா போன்ற அதிக ரசிகர் படை கொண்ட வீரரை இழக்க பிசிசிஐ உடனடியாக தயாராக இருக்காது என்றும் பார்க்கப்படுகிறது. பிசிசிஐ நிர்வாகத்தை பொறுத்தவரை அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசன் தொடக்கத்தில் ரோஹித் சர்மாவை விலக்க முடிவு செய்யலாம்.
ஏனென்றால் ஜூன் மாதத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்பின் உள்ளூரில் டெஸ்ட் போட்டிகளில் ஆடினால், புதிய கேப்டனுக்கு வீரர்களை தயார் செய்யவும் உதவியாக இருக்கும். இதனால் ரோஹித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுகிறோமா என்பதை பொறுத்தே வெளியாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.