பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலமாக இந்திய அணி விளையாடிய 3 போட்டிகளிலும், 3 வெவ்வேறு ஸ்பின்னர்களை பயன்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். காபா மைதானத்தில் நடந்த கடந்த 5 போட்டிகளில் பவுலிங் செய்த அணிகளே அதிகம் வென்றுள்ளன. அதனடிப்படையில் ரோஹித் சர்மா முடிவு எடுத்ததாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் வானம் மேகமூட்டமாக இருந்ததோடு, பிட்சிலும் புற்கள் இருந்தன. இதனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய உதவி கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்களை விரைவாக இந்திய அணி வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டத்திற்கான இந்திய பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த போட்டியில் சொதப்பிய ஹர்சித் ராணாவுக்கு பதிலாக ஆகாஷ் தீப் கொண்டு வரப்பட்டிருக்கிறார். அதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டிருக்கிறார். இதன் மூலமாக கடந்த 3 போட்டிகளிலும் இந்திய அணி 3 வெவ்வேறு ஸ்பின்னர்களை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. பெர்த் டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி இருந்தார்.
அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி இருந்தார். தற்போது ஜடேஜா சேர்க்கப்பட்டிருக்கிறார். வழக்கமாக வெளிநாடுகளில் இந்திய அணி ஒரேயொரு ஸ்பின்னருடன் விளையாடும் போது ஜடேஜாவை தான் முதல் நிலை ஸ்பின்னராக தேர்வு செய்யும். ஏனென்றால் அஸ்வினை விடவும் ஜடேஜாவால் பேட்டிங்கில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.
ஆனால் காபா மைதானத்தை பொறுத்தவரை டாப் ஸ்பின் செய்யக் கூடிய ஸ்பின்னர்கள் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஆனால் ஜடேஜா பெரிதாக ஸ்பின் செய்யக் கூடியவர் அல்ல. ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைனில் பேட்ஸ்மேன்களை தனது வேகம் மூலமாக ஏமாற்றி விக்கெட்டுகளை வீழ்த்தக் கூடியவர். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா அணியின் 4 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர்.
இதனையறிந்தும் ஜடேஜாவை இந்திய அணி தேர்வு செய்திருக்கிறது. இதன் மூலமாக ஒரு முனையில் ரன்கள் செல்லாமல் கட்டுப்படுத்துவதே ஜடேஜாவுக்கான திட்டமாக கொடுக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பும்ரா, சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் இருப்பதால், அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஜடேஜாவின் பவுலிங் இருந்தாலே போதுமானதாக பார்க்கப்படுகிறது.