மும்பை: முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், விராட் கோலியின் ஃபார்ம் குறித்து சமீபத்தில் பேசி இருந்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கவுதம் கம்பீர், "பாண்டிங்கிற்கு இந்திய கிரிக்கெட்டில் என்ன வேலை?" எனக் கேட்டு சீறினார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. இந்த தொடருக்கு முன் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய வீரர்களை சீண்டுவது வழக்கமாக உள்ளது. இதற்கு முந்தைய ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களின் போதும் இந்திய அணி முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்களின் மறைமுக தாக்குதலை சந்தித்து இருக்கிறது.

அந்த வகையில் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து ரிக்கி பாண்டிங் பேசி இருந்தார். அப்போது கடந்த ஐந்து ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி இரண்டு சதங்கள் மட்டுமே அடித்து இருப்பதாகவும், வேறு எந்த அணியின் டாப் ஆர்டர் வீரர் நீண்ட காலமாக சதம் அடிக்காமல் இருந்தால் அணியில் நீடித்து இருக்க முடியாது எனவும் அவர் பேசி இருந்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விராட் கோலி 93 ரன்களும், ரோஹித் சர்மா 91 ரன்களும் எடுத்து இருந்தனர். அவர்களது பேட்டிங் சராசரி அந்த தொடரில் 15 என்பதாக இருந்தது. அது பற்றி தான் ரிக்கி பாண்டிங் இவ்வாறு கிண்டல் செய்யும் வகையில் பேசி இருந்தார்.
அது பற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் கேட்கப்பட்டது. அப்போது பேசிய கம்பீர், "விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை பற்றி எந்த கவலையும் இல்லை. இந்திய கிரிக்கெட்டில் பாண்டிங்கிற்கு என்ன வேலை உள்ளது? அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை பார்த்துக் கொள்ளட்டும்." என்றார்.
5 ஆண்டில் 3 சதங்கள்.. விராட் கோலிக்கு மட்டும் இவ்வளவு வாய்ப்பு கிடைத்துள்ளது.. பாண்டிங் பேட்டி!
மேலும், "ரோஹித் மற்றும் விராட் கோலி நல்ல நிலையில் உள்ளனர். அவர்கள், ஏற்கனவே தங்களை நிரூபித்து உள்ளனர். அவர்களிடம் ரன் குவிக்க வேண்டும் என்ற வேட்கை உள்ளது. கடந்த தொடரில் அதுதான் நடந்தது." என்றார்.