பெர்த் : பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி தொடர்ந்து 2 முறை ஆஸ்திரேலிய மண்ணில் வென்று சாதனை படைத்திருக்கிறது. தற்போது மூன்றாவது முறையாக ஹாட்ரிக் சாதனையை இந்தியா படைக்குமா என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கும் கேள்வியாக இருக்கின்றது.
ஆனால் இந்திய அணி தற்போது மனதளவில் உத்வேகம் குறைந்த நிலையில் இருக்கிறது. காரணம் சொந்த மண்ணில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை இந்தியா இழந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் நியூசிலாந்து எதிராக பூஜ்ஜியத்துக்கு மூன்று என்ற கணக்கில் இந்தியா ஒயிட்வாஷ் ஆகியிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகப்பெரிய சவாலாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நேரடியாக தகுதி பெற வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் நான்குக்கு பூஜ்ஜியம் அல்லது 4க்கு1 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும்.
இதனால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்த முடியுமா அப்படி வீழ்த்த வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.
இந்திய அணியில் புஜாரா, ரஹானே போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாதது மிகப்பெரிய குறையாக பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா தன்னுடைய குழந்தை பிறந்ததால் தற்போது அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்லவில்லை. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார். இந்திய அணியின் நட்சத்திர வீரரான கில்லுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
இப்படி நிலைமை இருக்க பும்ரா தலைமையிலான இந்திய அணியே வரும் 22ஆம் தேதி பெர்த் நகரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. பும்ராவுக்கு ஏற்கனவே இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் வழி நடத்திய அனுபவம் இருக்கின்றது. இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் அவர் கேப்டனாக இருந்து சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார்.
ஆனால் இந்திய அணி அந்தப் போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது. ஒரு காலத்தில் நம்மிடம் பேட்டிங் வலுவாக இருக்கும். ஆனால் பந்துவீச்சு பலமாக இருக்காது. ஆனால் தற்போது பந்துவீச்சு பலமாக இருக்கிறது. ஆனால் பேட்டிங்கில் வீரர்கள் தடுமாறுகிறார்கள். ஆஸ்திரேலியாவையும், இந்தியாவையும் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டு அணிகளின் பந்துவீச்சும் சரிசம பலத்துடன் இருக்கிறது.
இரு அணிகளின் பேட்டிங்கை ஒப்பிட்டு பார்த்தால் இரண்டு அணியிலுமே அனுபவம் குறைந்த வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஆஸ்திரேலியா அதன் சொந்த மண்ணில் விளையாடுவதால் அவர்களுக்கு கூடுதல் சாதகமாக அமைகிறது. இந்த டெஸ்ட் தொடரில் எந்த அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக செயல்படுகிறார்களோ, அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்.
ஏனென்றால் இரண்டு அணியின் பவுலர்களுமே டாப் கிளாஸ் ஆக இருக்கின்றார்கள். இந்திய அணியில் பும்ரா, சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், நிதீஷ்குமார் ரெட்டி போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அஸ்வின், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என்ற சுழற் பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியில் ஹேசல் வுட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் பேட்டிங்கில் இந்திய வீரர்கள் தற்போது பெரிய அளவில் ஃபார்மில் இல்லை. நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மொத்தமாக அடித்த ரன்கள் 93. ரோகித் சர்மா மொத்தமாக அடித்த வீரர்கள் 91. இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு வீரர்களுமே அதிக ரன்கள் குவித்தால் மட்டுமே ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும். குறிப்பாக விராட் கோலிக்கு ஆஸ்திரேலியாவில் விளையாடுவது என்பது அல்வா சாப்பிடுவது போல் ஆகும்.
விராட் கோலி, இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் விளையாடி மொத்தமாக 1352 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஆறு சதம், நான்கு அரை சதம் அடங்கும். விராட் கோலிக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் தற்போது இருக்கும் அணியில் அதிக ரன்கள் அடித்திருப்பது ரிஷப் பண்ட் தான்.
ஏழு டெஸ்ட் போட்டிகளில் அவர் 624 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம் இரண்டு அரை சதம் அடங்கும். சராசரி 62 என்ற அளவில் இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவில் ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 408 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று அரை சதம் அடங்கும். சராசரி வெறும் 31 என்ற அளவில் தான் இருக்கின்றது.
இதனால் இந்த மூன்று வீரர்களும் அதிக ரன்கள் குவித்தால் மட்டுமே ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வெற்றி பெற முடியும். இந்திய மண்ணில் அதிரடியாக ஜெய்ஸ்வால் விளையாடி ரன்களை குவித்து வருகிறார்.தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக விளையாடப் போகிறார். இதில் அவருடைய முழு திறமையும் வெளிவரும். இதே போன்று பயிற்சி ஆட்டத்தில் துருவ் ஜூரல், தேவுதட் படிக்கல் போன்ற வீரர்கள் ஜொலித்தார்கள். எனினும் பெரிய தாக்கத்தை ஏதும் அவர்கள் ஏற்படுத்தவில்லை.
இதனால் இந்திய அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் யாரேனும் ஒருவரோ, இருவரோ இந்த தொடரில் மொத்தமாக 500, 600 ரன்கள் குவித்தால் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு சவால் தர முடியும். இல்லையென்றால் தோனி தலைமையில் நாம் 2012 ஆம் ஆண்டு அடி வாங்கியது போல் ஒரு நிலை ஏற்படலாம். இந்திய அணி மீது பெரிய அளவில் ரசிகர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் இழந்த மானத்தை மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு சென்று இந்திய அணி மீட்கும் என்ற ஆசை மட்டும் இருக்கின்றது. அது மெய்யாகுமா என்பது வரும் 22ஆம் தேதி முதல் தெரியவரும்.