மெல்போர்ன்: மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் சிட்னி மைதானத்தில் நடக்கவுள்ள 5வது டெஸ்ட் போட்டி எப்போது தொடங்கும் உள்ளிட்ட முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 184 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை இந்திய அணி பெற்றுள்ளது. இதனால் பார்டர் கவாஸ்கர் டிராபியில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது. இனி பார்டர் கவாஸ்கர் டிராபியை வெல்ல முடியவில்லை என்றாலும், இந்திய அணி தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

அதற்கு சிட்னி மைதானத்தில் நடக்கவுள்ள டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெல்ல வேண்டும். பார்டர் கவாஸ்கர் டிராபி இதுவரை 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராகவே நடத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடைந்துள்ள வளர்ச்சி காரணமாக, நடப்பாண்டில் இருந்து 5 போட்டிகள் கொண்ட தொடராக மாற்றம் பெற்றுள்ளது.
இது ஒரு வகையில் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஏனென்றால் 4 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்பட்டிருந்தால், இந்திய அணி இந்நேரம் தொடரை இழந்து இந்தியாவுக்கு விமானம் ஏறி இருக்கும். அதேபோல் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான கதவுகள் மூடப்படாமல் நிறுத்தப்படும்.
இதனால் சிட்னி டெஸ்ட் போட்டி இந்திய ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி ஜனவரி 7ஆம் தேதி நடக்கவுள்ளது. அதாவது அடுத்த 3 நாட்களில் கடைசி டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதவுள்ளன. இந்த இடைவேளை போதுமானதா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
சிட்னி டெஸ்ட் போட்டிக்கு தயாராக இந்திய அணி வீரர்கள் உடனடியாக பயிற்சிக்கு திரும்ப வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. ஏற்கனவே பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் சோர்வடைந்துள்ள நிலையில், 3 நாட்களில் அடுத்த போட்டியில் ஆடினால் காயமடையவும் வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா அல்லது காயம் என்று தன்னை தானே பெஞ்ச் செய்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் புஜாரா, ரஹானே உள்ளிட்டோர் எப்படி ஓரங்கப்பட்டார்களோ, அதேபோல் ரோஹித் சர்மாவும் ஓரங்கட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.