சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை அதிகாலை சிட்னி மைதானத்தில் தொடங்கவுள்ளது. கேன்சருக்கான எதிரான விழிப்புணர்வு போட்டியாகவும் நடத்தப்படுவதால், இந்த டெஸ்ட் போட்டி பிங்க் டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா வீரர்களின் ஜெர்சியிலும் பிங்க் நிறம் இடம்பெற்றுள்ளது.
மைதானத்தில் அனைத்து பகுதிகளும் பிங்க் நிறத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டு முடிவடைந்த பின் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி என்பதால், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை போல் அதிகளவிலான ரசிகர்கள் நேரில் பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடந்துள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதனால் பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்க வைக்க இந்திய அணிக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு சிட்னி டெஸ்ட் போட்டி தான். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிஜிடி கோப்பையை ரீடெய்ன் செய்வதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் தக்க வைத்து கொள்ள முடியும். இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் நட்சத்திர ஆல்ரவுண்டரான மிட்சல் மார்ஷ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அறிமுக வீரர் வெப்ஸ்டர் கொண்டு வரப்பட்டிருக்கிறார். சாம் கான்ஸ்டாஸ் கொடுத்த அதிரடி தொடக்கம் காரணமாக ஆஸ்திரேலியா அணி மீண்டும் அறிமுக வீரர் மீது நம்பிக்கை வைத்து களமிறக்குகிறது. இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் ரோஹித் சர்மா நாளைய ஆட மாட்டார் என்று கூறப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஆகாஷ் தீப் காயமடைந்த நிலையில், வாஷிங்டன் சுந்தரும் விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ளது. இதனால் கேப்டன்சியை பும்ரா எடுத்துக் கொள்ளும் பட்சத்தில், இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் சிட்னி மைதானத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட மெல்போர்ன் மைதானத்தை போன்றே சூழல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடைசி இன்னிங்ஸில் ரன்கள் சேர்ப்பது கடினமான விஷயம் என்பதால், டாஸ் வெல்லும் அணி உடனடியாக பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும். அதேபோல் முதல் பேட்டிங் ஆடும் அணி குறைந்தது 300 முதல் 350 ரன்களை சராசரியாக விளாசி இருக்கின்றனர். இதனால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு 30 நிமிடங்கள் முன்பாக அதிகாலை 4.30 மணிக்கு டாஸ் போடப்படவுள்ளது. முதல் செஷன் அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை நடக்கும். அதன்பின் 40 நிமிடங்கள் உணவு இடைவேளைக்கு பின் 2வது செஷன் காலை 7.40 மணி முதல் 9.40 மணி வரை நடக்கவுள்ளது. இதன்பின் 20 நிமிடங்கள் தேநீர் இடைவேளை கொடுக்கப்படும்.
தொடர்ந்து கடைசி செஷன் 10 மணி முதல் 12 மணி வரை நடக்கவுள்ளது. குறிப்பிட்ட ஓவர்களை வீசி முடிக்க 30 நிமிடங்கள் வரை கூடுதல் நேரம் அளிக்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் நேரலையாக இந்திய ரசிகர்கள் காண முடியும்.